Friday, February 14, 2020

வானம் கொட்டட்டும்





கடந்த சில வருடங்களாகவே, குறிப்பாக முகநூலிலிருந்து வெளியேறிய பிறகு திரைப்பட விமர்சனங்கள் எழுதுவதை தவிர்த்து வந்தேன். திருவனந்தபுர திரைவிழாவில் பார்த்த மிகச் சிறந்த கலைப்படங்களைப் பற்றியாவது எழுத வேண்டும் என்று நினைத்து அதுவும் டிவிட்டரோடு நின்றுவிட்டது. புனரமைக்கப்பட்ட இத்தளத்தில் இனி குறிப்புகளாகவாவது எழுத வேண்டுமென்று விழைகிறேன்.


நண்பர் தனா இயக்கிய முதல் திரைப்படமான "படைவீரன்" வெளியான அன்று முதல் காட்சியை நண்பர்கள் படை சூழ சென்று பார்த்தோம். காட்சியமைப்புகளின் தெளிவிலும் வண்ணங்களின் குழைவிலும் தானொரு மணி ரத்னத்தின் மாணவன் என்பதை பதிவு செய்திருந்தார்.  ஆனால் கதாப்பாத்திர தேர்வில் தொடங்கி திரைக்கதையாக்கம் வரை செறிவற்று அமைத்ததில் ஒரு இயக்குனராக தோல்வியடைந்திருந்தார். முதற்படம் உருவாக்குவதில் இருக்கும் அழுத்தங்களையும் மீறி பாறையிடுக்கில் பீறிடும் அருவியைப் போல சிறந்த இயக்குனர்கள் எப்படியாவது தங்களை வெளிக்கொண்டு வந்துவிடுவார்கள். அப்படியானதொரு கவனத்தை  தன்னுடைய  இரண்டாவது படத்தில்தான் உருவாக்கியிருக்கிறார் தனா.

இப்படம் ஒருவகையில் முக்கியமானது என்பதை ஒரு சில புள்ளிகளில் தொகுத்துக் கொள்ளலாம் என்று இப்போது தோன்றுகிறது. ஜெயமோகன் அவர் தளத்தில் முன் வைத்திருந்த குறிப்புகளை ஒட்டிதான் என்னுடைய எண்ணங்களும் அமைகிறது.

முதலில், படைவீரனில் முதன்மையான சறுக்கலை எங்கு சந்தித்திருந்தாரோ அங்குதான் தனா இதில் பலமாக எழுந்து நின்றிருக்கிறார். பாத்திரங்கள் வடிவமைப்பிலும் அதற்கான நடிகர்களின் தேர்வுமே இப்படத்தின் முதல் சிறப்பு. ராதிகாவும் ஐஸ்வர்யா ராஜேஷும் விக்ரம் பிரபுவிற்குமே கூட அவர்களின் உருவுக்கு ஏற்றபடி கதைப் பாத்திரம் உருகொண்டெழுவதைப் போல ஒரு தோற்றம் உருவாவது ஆச்சர்யமே. தன்னந்தனியனான ஒரு வயதான அண்ணனை பாலாஜி சக்திவேல் தன் எடை தாங்கிய நடையிலேயே அன்பு செய்ய வைக்கிறார். சரத்குமார்-ராதிகா ஒரு சாமர்த்தியமான தேர்வு, வசதியானதும் கூட. அவர்களிடையேயான அன்னியோன்யத்தை நிரூபிக்க ஒரு காட்சி கூட வீணாக்கத் தேவை ஏற்படவில்லை இயக்குனருக்கு. சிறை மீண்டு வந்த பிறகு சரத்குமாருக்கு சாதகமாக தன் பிள்ளைகளை எதிர்த்து ராதிகா நிற்பது நியாயமாகவே தோன்றியது, எந்தக் காரணமும் கூறப்படமாலேயே. சாந்தனு, ரெட்டி, ரெட்டியின் மகன் என அவர்களின் தோற்றமே அவர்களுக்கான கதைகளை எழுதிக் கொள்கிறது. இதனால், இத்தனை நடிகர்கள் குழுமியிருக்கும் இக்கதையில் எல்லோருக்குமான கதாப்பாத்திர வளர்ச்சியைப் பற்றி கவலைப்பட அவசியமில்லாமல் போகிறது. மையப் பாத்திரங்களின் உருமாறும் உறவுகளின் தன்மைகளே தனித்துவமாக மேலெழுந்து வருகிறது. அதுவே இப்படத்தின் ஆகப்பெரிய சிறப்பம்சமாக எனக்கு தோன்றுகிறது.

கோட்டுரு படங்களில் மைய கோட்டை தொட்டு தொட்டு விலகிச் செல்லும் ஒலி அலைகளைப் போல இக்கதையின் மைய உறவுகள் பட்டும் படாமலும் தங்களை அமைத்துக் கொள்கின்றன. நகரத்திற்கும் கிராமத்திற்குமான வேறுபாட்டை இந்த விலகல் அடிக்கோடிடுகிறது. அண்ணனை அரிவாளால் தாக்கிய இருவரை கொன்றேவிடுகிறான் தம்பி போஸ். சிறையிலிருக்கும் போஸை பழி தீர்ப்பதற்காக 16 வருடங்கள் காத்திருக்கிறார்கள் இறந்தவனின் மகன்கள். இப்படி உறவுக்காக உயிரையும் வாழ்க்கையையும் தொலைக்கும் கிராம வாழ்க்கையிலிருந்து தன் குழந்தைகளோடு    வெளியேறும் சந்திரா எந்த உறவுகளையும் மீண்டும் நாடிப் போவதில்லை. உண்மையில் சந்திராவின் குடும்பத்தினரைப் பற்றிய எந்த தகவலும் இல்லை. செல்வாவிற்கும் மங்கைக்கும் இடையிலான அண்ணண் தங்கை உறவு கூட விளையாட்டாகவேதான் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. ஒருவருக்கொருவர் பலமாக துணை நிற்கிறார்கள் என்றாலும் வெகு இயல்பாக வாழ்வின் வேக ஓட்டத்திற்கு ஊடாக அவர்களின் உறவு அடுத்த கட்டங்களுக்கு துள்ளிச் செல்கிறது.

மங்கை, கல்யாண் ரெட்டி, ராமன் இவர்களுக்கிடையிலான உறவு தமிழ் சினிமாவிற்கு புதுமையான ஒன்று. இன்ன மாதிரி என்று எந்த வரையறையும் இல்லாமல் எப்படி வேண்டுமானாலும் முடியும் சாத்தியத்தோடே முன்னகர்கிறது. ஒரு காட்சி இதை மிகச் சிறப்பாக பதிவு செய்கிறது. கல்யாண் ரெட்டியுடன் மங்கை பேருந்தில் சென்றுக்கொண்டிருப்பதை அண்ணன் செல்வா பார்த்து துரத்துகையில், மங்கை அவனிடமிருந்து தப்பித்து தெருக்களின் வழி ஓடி ஏதேச்சையாக பைக்கில் அங்கு வரும் ராமனுடன் தொற்றிக் கொண்டு தப்பி விடுகிறாள். கல்யாணிற்கும் ராமனுக்கும் இடையிலான மங்கையின் ஓட்டத்தில் இடையே அண்ணன். ஆனால் அந்த சிறிய துரத்தலை மீறி செல்வா எந்த விதத்திலும் மங்கையின் முடிவுகளில் ஆதிக்கம் செலுத்துவதில்லை. மங்கையுமே ஏன் ராமன் இன்னும் தன்னிடம் காதலை சொல்லவில்லையென்றோ கல்யாண் ரெட்டி ஏன் தன்னிடம் சொல்லாமல் தன்னை பெண் பார்க்க வந்து நிற்கிறான் என்றோ எந்தக் கேள்வியும் கேட்டுக் கொள்வதில்லை. அதன் போக்கில் வாழ்வின் மீது காலாற நடக்கிறார்கள். இப்படியான ஒரு உறவுதான் ப்ரீதாவிற்கும் செல்வாவிற்கும் இடையிலும். செல்வா தன் தொழிலில் தன்னுடைய வெற்றியை போஸிற்கு காட்டும் காரணியாகவே ப்ரிதாவின் பாத்திரம் அமைந்திருந்தாலும் இவர்கள் எவர் இடையிலும் சிடுக்குகள் இல்லாமல் இருப்பதற்கு உறவின் அழுத்தங்கள் அற்று இருப்பதே காரணமாக அமைகிறது.

தன் மகன்களுக்காக ஊரைவிட்டு வெளியேறியதாலேயே தாய் பாசத்தை  இரண்டு பாடல்களிலாவது சித் தன் அடித் தொண்டையிலிருந்து பிழிவதற்கான அத்தனை சாத்தியங்கள் இருந்தும் அது தவிர்க்கப்பட்டிருப்பது உயிர் வதையிலிருந்து விடுதலையாவதற்கு ஒப்பானது. மாறாக சந்திரா தன் கணவன் திரும்பிய பிறகான ஒரு சந்தர்ப்பத்தில் "எனக்கென நீ என்ன செய்தாய்?" என்று தன் மகனைப் பார்த்து கேள்வி கேட்கும் ஒருவராகத்தான் இருக்கிறார். விடுதலையான தன் கணவனின் மீது அன்பையும் பொறுப்புகளையும் அள்ளிக் கொடுக்கும் சந்திரா அவர் சிறையிலிருந்தபோது சென்று சந்தித்தது சொற்ப சந்தர்பங்களில் மட்டுமே. இப்படி மைய உறவுகள் அத்தனையும் நகரம் தந்த விடுதலையின் மீதேறி, வாழ்வை புதிய கலங்களில் இனி சமைக்க வேண்டிய தேவையின் காரணம் கொண்டு தங்களுக்குள் பின்னிப் பிணையாமல் இலகுவாகவே தொட்டுச் செல்கிறது. இது தமிழ் சினிமாவின் நவீன யதார்த்த பின்னணியில் அமையும் பெரும் முன்நகர்வு. படத்தின் முதல் காட்சியிலேயே இயக்குனர், விலங்கு மனிதன் உறவுகள் வன்முறை ஒன்றுக்கொன்று முயங்கி கிடக்கும் கிராமத்தை சொல்லிவிடுகிறார். மிச்ச படம் இதன் எதிர்வினையே. விளையாட்டாக இதையும் சொல்லலாம்: இப்படத்தின் பாடல் வரிகளும் இசையை தொட்டும் தொடாமலேயேதான் கடக்கிறது!

மிகவும் சன்னமாக சாதி மத அழுத்தங்களிலிருந்து நகரம் தரும் விடுதலையும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. சந்திரா வாழும் தெரு ஒரு முஸ்லீம் தெரு. அவருக்கு வேலை கொடுத்து உதவுவது ஒரு முஸ்லீம். செல்வாமீது காதல் கொள்ளும் ப்ரீத்தா ஒரு கிறித்துவர். சாதியும் குடும்பப் பகைகளும் உயிர் பலி கேட்கும் ஒரு சூழலிலிருந்து அவர்கள் வந்து சேர்ந்து வளரும் இடம் மிக முக்கியமானது. அது அதிக சத்தமின்றி சொல்லப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட இந்த மைய கருவை சொல்லும் முயற்சியில்தான் தன் முதல் படத்தில் தோல்வி கண்டிருந்தார் தனா. அந்த வகையில் இத்திரைப்படம் அவரின் கவனம் கொள்ளத்தக்க பாய்ச்சல்தான்.



வானம் கொட்டட்டும் ஒரு சிறந்த படமாக அமையாமல் ஒரு நல்ல படமாக நின்று விட்டதிற்கு முதன்மையாக மூன்று காரணங்களை கூற முடியும். இது ஒரு வெகுஜன சினிமாதான் என்றே எடுத்துக் கொண்டாலும் சமரசங்கள் தவிர்க்க முடியாதவை என்பதை கருத்தில் கொண்டாலும் இப்படத்தின் முடிச்சுவுகள் அவிழும் இடங்கள் அது பிண்ணப்பட்ட தரத்தில் இருந்து வெகுவாக கீழிறங்கியிருக்கிறது. உதாரணமாக மங்கையின் இன்னவென்று சொல்ல முடியாத ஒரு முக்கோண உறவை முடிக்க எண்ணி மிகவும் பழக்கப்பட்ட இடத்தில் கொண்டு வந்து முடித்திருப்பது. "இராமன் தன் காதலை இன்னும் சொல்லவில்லையே" என்ற இடத்திலேயே மங்கையின் சாய்வு எவர் மீது என்பது புலனாகிவிட்டபோது, அந்தக் கதை இப்படி வசதியாக முடிய வேண்டிய அவசியமில்லை. ராமனுக்கு தன் காதலை சொல்லும் தைரியத்தை வரவழைக்கும் ஒரு சூழல் வலிந்து திணிக்கப்பட்டிருக்கிறது. ராமனுக்கு நேர்மாறாக  வெளிப்படையாகப் பேசும் கல்யாண் இப்படி மங்கையிடம் சொல்லாமல் தன் பெற்றோரை அழைத்து வருவானா? இந்த முக்கோண உறவு இப்படத்தில் முடிவுறாமல் இருந்திருந்தாலும் இன்னமும் அழகானதாக இருந்திருக்கும் என்பது என் எண்ணம். ப்ரீதாவிற்கும் செல்வாவிற்கும் முத்தத்தில் தொடங்கும் காதலும் இப்படித்தான். அவர்களுக்கென ஒரு டூயட் கூட படத்தில் இல்லாதபோது இரண்டரை மணி நேரத்தில் அவர்கள் காதலர்களாக மாற வேண்டிய அவசியம் என்ன? அவர்களுக்கு இன்னமும் நேரம் இருக்கிறது. சிறையிலிருந்து திரும்பி வந்த போஸ் உதவ எண்ணி செய்யும் காரியங்கள் விபரீதத்தில் முடிவது இக்கதையின் புதுமையான ஒரு கோணம். ஏற்கனவே விலகி நிற்கும் பிள்ளைகளுக்கு நியாயம் சேர்ப்பவை. கணவன் என்பதால் சந்திராவும் தம்பி என்பதால் வேல்சாமியும் அவர் பக்கம் நிற்கலாம், அந்த அவசியம் அவர் வாசமின்றி வளர்ந்த பிள்ளைகளுக்கு இல்லை. ஆனால், "கோல்டன் ப்ரூட்ஸ்" லாபகரமாக மாறுவதும் கல்யாணிடம் சத்தம் போட்டதாலேயே அவன் பெற்றோர்களை அழைத்து வருவதும் ஒரு வெகுஜன சினிமாவாக, அதுவும் "எல்லோருக்கும் பிடிக்கும்" சினிமாவாக மாற வேண்டிய அவசரத்தில் செய்யப்பட்டவையாகவே இருக்கிறது.

இரண்டாவதாக திரைக்கதை ஒரு சிறுகதைக்கு ஒப்பானது. தொடங்கிய சில நிமிடங்களிலேயே இதன் பயணம், நோக்கம் தெளிந்துவிட வேண்டும். ஓட்டத்தினுடாக இதில் ஏற்படும் அலைபாய்தல்கள் படத்திலிருந்து கவனத்தை சிதறடிக்கவே செய்யும். வன்முறைக்கு எதிராக தொடங்கும் இப்படம் அதை அழுந்தப் பதிய தவறவிடுகிறது. விடுதலையான போஸ் சிறை வாழ்க்கையிலிருந்து பாடம் கற்றுக் கொண்டதாக இல்லை. மீசையை முறுக்கி புல்லட்டில் சென்று காதல் பஞ்சாயத்து செய்யவே விரும்புகிறார். அப்பாத்திரம் அப்படிதான் அமையும் என்றே கொண்டாலும் இறுதி வசனத்தில் ஒரு கொலை செய்ததின் மூலம் சிறையில் தன் வாழ்க்கை அழிந்ததே என்று வருத்தப்படுகிறார் அன்றி வன்முறையையும் வன்முறையின் மீதான தன் இனத்தின் பற்றையும் கேள்விக்குள்ளாக்குவதில்லை. வேல்சாமியும் கூட "நம்ம ஊர் போலீஸா இருந்தா ஈஸியா வெளியே கொண்டு வந்து விடுவேன்" என்ற ரீதியிலேயே பேசுகிறார். இதே வசதி பாஸ்கரனுக்கு கிடைக்குமென்றால் அவனும் போஸை கொலை செய்து விட்டு வெளியில் வந்துவிடலாமா? பாஸ்கரன் இப்படத்தின் மிக முக்கியமான பாத்திரம். முதல் காட்சியில் இரத்தம் தெறிக்கும் முகத்துடன் அறிமுகம் ஆகும் இவனை நோக்கித்தான் இடைவேளை காட்சி உறைகிறது. ஆனால் கதையோட்டத்தில் அவனுக்கான இடம் கொடுக்கப்படவில்லை. அவனின் நியாயத்தின் ஒரு துளி குருதி கூட படத்தின் இறுதியில் நம் மீது தெறிக்கவில்லை. அவன் நியாயம் தோற்கும் இடம் அல்லவா அது. போஸின் ஒரு வரி அவன் பித்து பிடித்து திரிந்த வாழ்க்கையை மீட்டு கொடுத்து விடுமா? கதைக்குள் சரியான வளர்ச்சியற்ற ஒரு எதிர் பாத்திரம் படத்தின் சமன் குலையச் செய்யும். பார்வையாளர்களை வெளியே தள்ளும்.

மூன்றாவதாக, இப்படத்தின் தொழில் நுட்ப அம்சங்கள் மெட்றாஸ் டாக்கீஸ் தரத்தில் இருந்தாலும் சித் ஸ்ரீராமின் பின்னணி இசை பெரும் சோர்வையே கொடுத்தது. மணி ரத்னத்தின் சமீபத்திய கண்டுபிடிப்பான 'பாடல்களை பிச்சு பிச்சு போடும்" உத்தி நன்றாக கை கொடுத்தாலும் பின்னணி இசை அவரின் முதிரா அனுபவத்தையே உணர்த்தியது. பின்னணி இசையின்றி படங்கள் பார்த்து பழகிவிட்ட என் போன்றோருக்கு பெரும் சித்திரவதையாகவே இருந்தது. (விகடன் பாணியில் 'சித்'திரவதை என்று போட்டிருக்க வேண்டுமோ) உதாரணமாக ஒரு காட்சி மட்டும். தந்தையை இழந்து ப்ரீத்தா தனிமையில் அமர்ந்திருக்கிறாள். வாழ்வின் பெருந்துணையை இழந்திருக்கும் அவளிடத்தில் செல்வா நெருங்கிச் செல்கிறான். பார்வையாளனுக்கு ஒரு சின்ன ஆர்வத்தை அந்த அமைதி கொடுக்கிறது. அவர்கள் உறவு அடுத்த கட்டத்தை அடையப் போகும் இடம் அது. ஆனால் ஒரு சொல் அங்கு உதிர்க்கப்படும் முன்னரே பின்னணி இசை எழுகிறது. அதுவும் படம் முழுதும் பல்வேறு இடங்களில் இசைக்கப்பட்ட அதே இசை. இது என்ன மாதிரியான காட்சி என்பது அந்த நொடியே புரியவைக்கப்படுகிறது. தன்னுணர்வின்றியே பார்வையாளனுக்கு பெரும் அயர்ச்சியை இது கொடுத்து விடுகிறது. பிறகு அவன் செய்ய வேண்டியதெல்லாம் அக்காட்சி முடியும் வரை காத்திருப்பதுதான், திரையில் நடப்பவற்றிற்கு எந்த ஒட்டுதலும் இல்லாமல். இப்படி பல காட்சிகளை ஒரு படி கீழே இழுத்துக் கொண்டேயிருக்கிறது பின்னணி இசை. சித் ஸ்ரீராமின் ஓசைகள் புதிதாக இருப்பது உண்மையென்றாலும் இப்படத்திற்கு அது உதவவில்லை. துண்டு பாடல்களாக வருவன சிறப்பாகவே இருப்பதும் உண்மைதான்.

வெகுஜன சினிமாவில் யதார்த்தப் படங்கள் தோன்றுவது மிகவும் முக்கியம். அப்படியொரு சூழல் அநேகமாக தமிழில் இல்லாமலே இருந்தது. மலையாளத்தில் மாஸ் படங்கள் வரும் அதே நேரத்தில் ஈ.மா. யோ. வரும். ஆனால் அநேகம் பேரை சென்றடைவது "கும்பளாங்கி நைட்ஸ்" போன்ற இடை நிலைப் படங்களே. தமிழில் அப்படியான இடை நிலைப்படங்களின் தொடக்கத்திற்கு வானம் கொட்டட்டும் படத்தின் வெற்றி அமையலாம்.  தனாவிற்கு வாழ்த்துக்கள்.


Tuesday, February 11, 2020

இந்தக் கதையை சரியாகச் சொல்வோம் - காளீஸ்வரனின் மதிப்புரை


https://www.jeyamohan.in/129687#.XkLN-1Iza00


[நரேந்திரன் மொழியாக்கம் செய்த இந்தக் கதையை சரியாகச் சொல்வோம் பற்றிய மதிப்புரை]
என்னுடைய அப்பா, அவரது பள்ளிப்படிப்பை முடித்த பின்னர், வேலைக்காக காங்கேயம்பாளையத்தில் இருந்து கோபிக்கு சென்றார். பின்னர் ஈரோடுக்கு. அம்மாவை மணமுடித்த பின்னர் ஒரு மளிகைக்கடை வைத்துக் கொண்டு “செட்டில்” ஆனது அவிநாசிக்கு அருகில் இருக்கும் “திருமுருகன்பூண்டி”யில். நான் பிறந்தது, படித்தது, வளர்ந்தது, இப்போது வாழ்வது பூண்டியில்தான் என்றாலும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் “காங்கேயம்பாளையம்” செலவது என் பால்யம் முதற்கொண்டே தொடரும் பழக்கம். எனக்கு மனதளவில் நெருக்கமான ஊர்தான் பூண்டி, அன்றாடம் 2 மணி நேரங்களை பயணத்தில் கழித்து நான் பணிக்குச் சென்றுவந்த போதும், பூண்டியிலேயே இருப்பதற்கான காரணம் இவ்வூருடன் எனக்கு அமைந்த பிணைப்பு. என்றபோதிலும், எவரேனும் ”உன் சொந்த ஊர் எது?” என கேட்கும்போது அன்னிச்சை செயலாகவே கூறிவிடுவேன் “காங்கேயம்பாளையம்” என்று. பணி நிமித்தம் சென்னையில் நான் ஏறத்தாழ 5 வருடங்கள் கழித்த தினங்களின் இரவுகள், என்னுள் பூண்டியின் நினைவுகளை கிளர்த்தியவை. இப்படி நாம் வசித்த ஊர் மீதான பிணைப்பும், நம் சொந்த மண்ணுடனான தொடர்ச்சியும் ஒருபோதும் நீங்காதவை.
“எனக்கிந்த ஊரே புடிக்கலடா, பேசாம நம்ம ஊர்ப்பக்கமே போயிடலாம்முண்ணு பாக்குறேன்” என்ற வாக்கியத்தை உச்சரிக்காத வெளியூர்வாசிகள் பாக்கியவான்கள். ஒரே நிலப்பரப்புக்குள், பெரும்பாலும் மிகக்குறைந்த மொழி , கலாச்சார வேறுபாடுகள் மட்டுமே நிலவும்போதே இத்தகைய இடர் என்றால், போரின் காரணமாகவோ அல்லது பணி நிமித்தமாகவோ வேறு நாடுகளில் வாழ நேர்ந்த மனிதர்களும் அவர்கள் குடும்பமும் சந்திக்கும் பிரச்சனைகள் எண்ணிலடங்காதவை.
*
அகதிகளாகவோ அல்லது பணி நிமித்தமோ, பிற நாடுகளுக்கு புலம் பெயர்ந்த பத்து எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தொகுத்து, அதை தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறார் எழுத்தாளர். நரேன். தொகுப்பின் பெரும்பாலான கதைகள் புலம்பெயரிகளின் இருத்தல் / கலாச்சாரம் சார்ந்த சிக்கல்கள் மற்றும் உறவுகளுக்கிடையேயான சிக்கல்களைப் பேசுபவை.
*
”கெயிட்டா”வுக்கு ஏற்கனவே திருமணமானது தெரிந்துதான் ”ந்னாம்” அவரை மணம் புரிந்துகொண்டாள். அவனது முதல் மனைவிக்குப் பிறந்த குழந்தைகளை பார்த்துக்கொள்ள விரும்பும் ந்னாம், தன் சம்பாத்தியத்தில் கட்டும் வீட்டைக்கூட கெயிட்டாவின் பெயரில் பதிவு செய்யுமளவு அவன் மீது அன்பு கொண்டவள். கெயிட்டா அகால மரணமடைகிறான். அதன்பின் அவனது மறுபக்கம் தெரியவருவதும், கெயிட்டாவுடனான தன்னுடைய வாழ்க்கையை / உறவை ந்னாம் மறுபரிசீலனை செய்வதும் மாறி மாறி சொல்லப்படுகின்றன. அவனது நினைவை கிளர்த்தும் பொருட்கள், வாசனை என ஒவ்வொன்றையும் அகற்றும் ந்னாம்மின் சித்திரம் மிகவும் துல்லியமானது. உகாண்டாவுக்கும் மான்செஸ்டருக்குமான ஒரு ஊஞ்சல் பயணம் போல அமைந்திருக்கிறது “இந்தக் கதையை சரியாகச் சொல்வோம்” கதை. வாசிக்கும் போது, கொஞ்சம் கொஞ்சமாக கெயிட்டாவின் நினைவை வீட்டில் இருந்து அழிப்பதைப் போலவே தன் மனதிலிருந்தும் அழிக்கும் ”ந்னாம்” ஐ, அவள் தன் தகப்பனிடம் வீட்டைப் பற்றிக் கேட்கும் தருவாயில் அறியமுடிகிறது.
என்னுடைய வாசிப்பில், இந்தக் கதைக்கு இணை வைக்கக்கூடிய ஒரு கதையாக “மறைந்து கொண்டிருக்கிறாய்நீ” ஐ சொல்வேன். அழிவுக் காலத்தை நெருக்கும் பூமியிலிருந்து ஒவ்வொரு பொருட்களாக மறைந்துகொண்டிருக்கும் சூழலில், தன்னுடைய உறவும் (அல்லது தன்னுடைய இருப்போ) அப்படியே மறைந்து போகக்கூடிய சாத்தியத்தை எண்ணிக்கொள்ளும் கதை அது. இங்கிருந்து மறைபவை எல்லாம் இன்னொரு பக்கத்தில் சென்று சேர்ந்து காத்திருப்பவை எனும் வரி பலவகையில் விரிவடையும் சாத்தியம் கொண்டது.
தன் பெற்றோரை, இளமையை தொலைத்த தாய் தன்னுடைய இழப்பை தன் மகனுடன் கழிக்கும் பொழுதுகளால் சரி செய்கிறாள். மகன் வளர்ந்து பெரியவனாகும் போது, தன் அன்னையின் மொழி, கலை எதுவும் அவனுக்கு போதாமலாகிறது. தான் இப்போதுள்ள நாட்டில் கிடைக்கும் விசயங்களை நோக்கி அவன் ஈர்க்கப்படுகையில் அவன் அன்னை மீண்டும் தனித்து விடப்படுகிறாள். அவனது தாயால் காகிதங்களில் செய்யப்பட்டு (ஒரகாமி) சிறுவயதில் அவனால் பெரிதும் விரும்பப்பட்டு, பின்னர் நவீன விளையாட்டுப் பொருட்களால் மறந்துபோன காகித மிருகங்கள் ஒருவகையில் அவனது தாய்தான், ஏன் நாமும்தான். தாயின் மரணத்துக்குப்பின் அவளது கடிதத்தை மகன் வாசிக்கும் தருணம் என்னை பெரும் தத்தளிப்புக்கு ஆளாக்கியது. ஒரு நள்ளிரவில்தான் நான் “காகித மிருக சாலை” எனும் இந்தக் கதையை வாசித்தேன். அந்தத் தாயின் இடத்தில், என்னால் எந்த உறவையும் பொருத்திப்பார்க்க முடிந்தது. உதாசீனப்படுத்தப்பட்டதன் வலி, துயரம் என்னை தூக்கமிழக்கச் செய்தது.
ஒரு தந்தையின், இரு மனைவிகளின் குழந்தைகள், அவர்களுக்கு ஒரே பெயர் எனும் விசித்திரத் தகவலுடன் துவங்கும் கதை ”தந்தையர் நிலம்”. முதல் தாயுடன் வாழும் புவாங் (விவியன்), தன் தந்தையின் இரண்டாம் குடும்பத்துடன் கழிக்கும் தினங்கள், அவர்களுக்கென அவள் கொண்டுவந்திருக்கும் பரிசுகள், அவர்களை மகிழ்விக்க பெரும் தொகையை விவியன் செலவிடுதல், தன் பெயருள்ள புவாங்குடனான விவியனின் நேசம், புவாங்க்கிற்கான தனிப்பட்ட பரிசு, விவியனைப் போல தான் மாற எண்ணும் புவாங் என விரியும் கதை, ஒரு ரோலர் கோஸ்டர் பயணத்தில், அந்தப் பயணம் போலவே மாறிவிடுகிறது. “என் தங்கையை பற்றி கவலைப்பட எனக்கு நேரமிருக்காது” எனும் விவியனின் கண்ணீர், அதன் மறு எல்லையாக, புவாங்கால் எரிக்கப்பட்ட புகைப்படங்களின் சாம்பல் காற்றில் மறையும் சித்திரம், என காட்டப்படும் மனதின் ஆழங்கள் ஒருபோதும் நான் அறிந்துவிட முடியாதவை.
எந்த ஒரு உறவும் உடனடியாக அமைந்துவிடுவதில்லை. ஒருவருடனான நம் வாழ்க்கைப் பயணம் என்பது ஆயிரம் ஆண்டுகள் பிராத்திப்பதால் வரக்கூடியது. ஆனால், பரஸ்பரம் தேவைப்படும் போது, இல்லாது போகும் உறவுகள் முறிகையில் அந்தப் பிராத்தனைக்கான நியாயம் செய்யப்படுவதில்லை. சிறு குழந்தையாய் இருக்கையின் தன் மகளுக்கான சொற்களை மறந்து போன, தகப்பனின் சொற்களுக்கு மகளின் வாலிபத்தின் எந்தப் பொருளும் இருப்பதில்லை. நாடு விட்டு நாடு வந்த போதும் மொழியே புரியாத போதும், சிறிதுகாலம் மட்டுமே அறிந்தபோதும் தன் தோழியுடன் தன்னால் பகிர்ந்து கொள்ளக் கூடிய விசயங்களை, ஒரே மொழி தெரிந்தும், ஒரே தேசத்தில் இருந்து வந்திருந்தாலும், தன்னுடைய நீட்சிதான் என்றாலும் தன் மகளுடன் பகிர்ந்துகொள்ள முடியாத ஒரு “ராக்கெட் சயிண்டிஸ்ட்” பற்றி நமக்குச் சொல்கிறது “ஆயிரமாண்டுப் பிரார்த்தனைகள்” கதை.
யுத்தகாலத்தின் நிச்சயமின்மை, ஒவ்வொரு தனி மனிதனிலும் நேரும் அதன் விளைவுகள், ஏதேனும் ஒரு குருட்டு நம்பிக்கையில் துவங்கும் பயணங்கள், எதிர்பாரா இடத்திலிருந்து அருளப்படும் ஒரு பற்றுக்கோல், அனைத்திலும் மேலான மனித மனத்தின் விளங்கிக்கொள்ள முடியாத இருட்டு என பல படிகளாக விரியும் கதை “ஒரு நேர்மையான வெளியேற்றம்”.
*
இந்தத் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கதையும் அருமையான வாசிப்பனுபவம் தருபவை. இத்தொகுப்பில், என்னை மிகவும் பாதித்த, தொந்தரவுக்குள்ளாக்கிய கதைகள் என ”காகித மிருக சாலை”, “இந்தக் கதையை சரியாகச் சொல்வோம்”, “ஆயிரமாண்டுப் பிராத்தனைகள்”, “தந்தையர் நிலம்”, “ஃப்ராவோவிலிருந்து ஒரு சவாரி”  கதைகளைச் சொல்வேன்.
*
ஒவ்வொரு கதையின் துவக்கத்திலும் தரப்பட்டுள்ள எழுத்தாளர்களைப் பற்றிய குறிப்புகள், அந்தக் கதைகளை நாம் புரிந்துகொள்வதற்கு உதவுகின்றன. இந்தக் கதைகள் நிகழும் பிரதேசங்கள் குறித்த சிறு புரிதல் இருப்பவர்களுக்கு இந்தக் கதைகள் இன்னும் அணுக்கமாக அமையக்கூடும். இந்தப் பத்து எழுத்தாளர்களும் தமிழில் மொழிபெயர்க்கப்படுவது இதுவே முதல் முறை. அவ்வகையில் பத்துகதைகளை மட்டுமல்ல, பத்து எழுத்தாளர்களை தமிழுக்கு, தன் அற்புத மொழிபெயர்ப்பால் அறிமுகப்படுத்தியுள்ளார் எழுத்தாளர். நரேன்.

சிறுகதைகளின் நிலவெளி - முத்துகுமாரின் அறிமுகவுரை


https://www.jeyamohan.in/129439#.XkLNDFIza00



[நரேந்திரன் மொழியாக்கம் செய்த சிறுகதைத் தொகுதியான ‘இந்தக்கதையைச் சரியாகச் சொல்வோம்’ நூலுக்கான மதிப்புரை] 

மிகத் தெளிவான முன்னுரையுடன் இம் மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு தொடங்குகிறது. இத்தொகுப்பில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர்ந்த எழுத்தாளர்களின் பத்து ஆங்கிலச் சிறுகதைகளை மொழி பெயர்த்து தந்திருக்கிறார் அறிமுக எழுத்தாளரான நரேன். பெரும்பாலும் இந்த எழுத்தாளர்கள் அனைவருமே புலம்பெயர்ந்தவர்களின் இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்தவர்கள்; பல தலைமுறைகளாக அங்கு தொடர்ந்து வாழ்ந்த பிறகே தீரும் அடையாளச் சிக்கலில் ( Identity Crisis) மாட்டிக் கொண்டவர்கள் மற்றும் அச்சிக்கலை தங்களின் நுண்ணுணர்வு கொண்டு அவதானிக்க முற்படுபவர்கள். இது இயல்பாகவே அவர்களை எழுத வைக்கிறது என்று எண்ணுகிறேன். இக்கதைகள் அனைத்தும், இவ்வடையாளச் சிக்கல்களில் மாட்டிக் கொள்ளாதவர்களையும் சேர்த்தே உலுக்கி விடுகின்றன.

பரந்த வாசிப்பும், அதைத் தொடர்ந்து செம்மைப் படுத்திக் கொள்ள உதவும் ஒரு நட்பு வட்டமும் அமையும் ஒருவரால் மட்டுமே இதுபோன்ற கதைகளை தேர்ந்தெடுத்து மொழிபெயர்க்க முடியும். நரேனை செம்மைபடுத்தியதில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் பங்கு மிகமுக்கியமானது.

அடையாளச் சிக்கலின் காரணங்கள்

இக்கதைகளில் வரும் முக்கியமான கதைமாந்தர்கள் அனைவரும் புலம்பெயர்ந்தவர்கள். பொருளாதார மேம்பாட்டிற்காக புலம்பெயர்ந்தவர்களுக்கும் , அரசியல் சூழல்களால் புலம்பெயர்ந்த கதை மாந்தர்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமை அவர்களுக்கு ஏற்படும் அடையாளச் சிக்கல் தான் என்றாலும்,  அதற்கான காரணம் எங்கு பொதிந்திருக்கிறது என்பதுதான் இவ்விரு தரப்பட்டவர்களுக்கும் இடையே உள்ள சுவாரஸ்யமான வேற்றுமையாக உள்ளது. ஆயிரமாண்டு பிரார்த்தனைகள் என்ற கதையில் வரும் அமெரிக்காவில் வாழும் பொருளாதார சுதந்திரமும், தன்னிறைவும் கொண்ட சீனப் பெண்ணிற்கு அடையாளச்சிக்கல்களை ஏற்படுத்துவது சீனக் குடும்ப கலாச்சாரத்தில் மூழ்கியிருக்கும் அவளுடைய 75வயது தந்தை என்றால், ‘நேர்மையான வெளியேற்றம்’ கதையில் வரும் சூடான் நாட்டு அகதியின் மகனான ஆங்கிலப் பேராசியருக்கு அவருக்கான அங்கீகாரத்தை அளிக்க மறுக்கும் வெள்ளைச் சமூகத்தால் அடையாளச் சிக்கல் ஏற்படுகிறது. முதல் வகையினருக்கு தாங்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் கிட்டிய அங்கீகாரம், இரண்டாம் வகையினருக்கு கிட்டாதது தான் இவர்களுடைய அடையாளச் சிக்கலின் தீவிரத்தை வெளிப்படுத்துவதாக  உள்ளது.
பெண்களின் அடையாளச் சிக்கல்

ஆனால், இக்கதைகளில் வரும் பெரும்பாலான பெண்கள் எந்தவிதமான அடையாளச் சிக்கல்களிலும் மாட்டிக் கொள்வதை தங்களுடைய கனிவாலும், சாதுர்யத்தாலும் தவிர்த்து விடுவது ஆச்சர்யமளிக்கிறது. ஆயிரமாண்டு பிரார்த்தனைகள்‘ கதையில் வரும் அமெரிக்காவில் வாழும் சீனப் பெண் ஒவ்வொரு உறவுக்கு பின்பும் பல நூறாண்டு பிரார்த்தனைகள் உண்டு என்ற வலுவான சீனக் கலாச்சாரத்தில் மூழ்கியிருக்கும் தன் தந்தையின் போதாமையைச் சுட்டிக் காட்டி தன்னுடைய ஏழு வருட மணவாழ்வை முறித்துக் கொண்டதை நியாயப்படுத்துகிறார்.

தன்னுடைய வீட்டின் குளியலறையில் இருக்கும்போதும் கூட தன்னை மற்றவர்கள் கண்கானிக்கிறார்கள்  என்ற உணர்வோடு கண்ணாடிச் சுவருக்குள் வாழவேண்டியிருந்த உகாண்டாவைச் சேர்ந்த ந்னாம் என்ற பெண் மான்செஸ்டரில் உள்ள தன் வீட்டினுள் முழு நிர்வாணமாக சுற்றிவரும் சுதந்திரத்தை அடையாளச் சிக்கல் என்ற பெயரில் பறிகொடுக்க விரும்பவில்லை என்பதை இந்தக் கதையைச் சரியாகச் சொல்வோம்‘ என்ற கதையில் காண முடிகிறது. தங்களுக்கு திடீரென முளைத்த சுதந்திரச் சிறகுகளை கத்தரித்துக் கொள்ள விரும்பாத புத்திசாலிகளாகவே இக்கதைகள் முழுவதும் பெண்கள் சித்தரிக்கப் படுகிறார்கள்.

விதிவிலக்காக, காகித மிருக சாலை என்ற கதையில் வரும் வரும் சீனப்பெண் இந்தச் சுதந்திரச் சிறகுகளை வெற்றுக் காகிதங்களாகப் பாவித்து, தனக்குத் தேவையற்ற ஒன்றென தவிர்த்து விடுகிறாள். தன்னுடைய சீனப் பண்பாட்டின் வழியாகவே தனக்கு நேரும் அடையாளச் சிக்கல்களை உறுதியான அமைதியோடு கடந்து போகிறாள். இப்படி இந்தத் கதைகளில் வரும் பெண்கள் அனைவரும் அடையாளச் சிக்கல்களை எதிர்கொண்டு வெல்லும் விதம் அவர்களுடைய Clarity of Toughtக்கு ஒரு சான்று.
மொழிபெயர்ப்பும் உணர்வுகளின் வெளிப்பாடும்

இந்த அடையாளச் சிக்கல்களை ஒட்டி இக்கதை மாந்தர்களுக்கு இடையே நடக்கும் உரையாடல்களில் மனித உணர்வுகளின் நுட்பங்கள் மிகக் கூர்மையாக வெளிப்படுகின்றன. ஆயிரமாண்டு பிரார்த்தனைகள்‘ கதையில் வரும் சீனத் தந்தை அமெரிக்காவிற்கு புலம் பெயர்ந்திருக்கும் தன் மகளின் மணமுறிவிற்கு அவள்தான் காரணம் என்பதை, அவள் தன் காதலனுடன் இரவில் தொலைபேசியில்மேற்கொள்ளும் அடாவடியான மற்றும் கட்டற்ற ஆங்கில உரையாடல்கள் வழியாக அறிந்து கொள்கிறார். ஆங்கிலம் அவ்வளவாக அறியாத அவருக்கு அவள் தன் காதலனுடன் என்ன பேசியிருக்க முடியும் என்பதை அவளுடைய பேச்சுத் தொனியை வைத்தே ஊகிப்பதை ‘அவளின் நிர்வாணத்தை கண்டுவிட்டதைப் போல உணர்ந்தார்’ என்ற வார்த்தைகள் நமக்கு நுட்பமாக கடத்துகின்றன. மிகச் சம்பிராதயமான உரையாடல்களைத் தவிர வேறு எந்த விதமான உரையாடலுக்கும் வாய்ப்பற்ற ஒரு சீனக் குடும்பப் பிண்ணணியால் தான் இதுபோன்ற விஷயங்களைப் பற்றி ஆங்கிலத்தில் மட்டுமே என்னால் எளிதாக உரையாட முடிகிறது என்று அவள் தன் தந்தையின் போதாமைகளைச் சுட்டிக் காட்டுவது, கெட்ட வார்த்தைகளாக சித்தரிக்கப்பட்டிருக்கும் உடலுறவு, அதிலடையும் உச்சக்கட்டம் போன்ற வார்த்தைகளை நம்மால்  ‘ I felt Orgasmic during sex…’ என ஆங்கிலத்தில் எளிமையாக கடக்க முடிவதை உணர்த்துகிறது. இது நம்முடைய தாய்மொழியின் போதாமையா அல்லது அதை சிறைப்படுத்தியிருக்கும் கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றின் போதாமைகளா என்பது விவாதத்திற்குரிய விஷயம்தான்.

இந்தக் கதையை சரியாகச் சொல்வோம்‘ என்ற கதையில் வரும் உகாண்டாவைச் சேர்ந்த ந்னாம் என்ற பெண், மான்செஸ்டரில் இருக்கும் தன் நாட்டைச் சேர்ந்த சக ஆண் புலம்பெயரியால் ஏமாற்றப்பட்டதை அவனின் மரணத்திற்குப் பிறகு தெரிந்து கொண்டு அவனின் நினைவுகளை அகற்றுவதை, தன் வீட்டிலுள்ள அவனுடைய உடமைகளை ( உள்ளாடைகள் முதற்கொண்டு) அகற்றுவதோடு ஒப்பிட்டு சித்தரிக்கும் விதம் மிகவும் வித்தியாசமாகவும் தத்ரூபமாகவும் உள்ளது. ஒவ்வொரு பத்திக்கும் கதை உகாண்டாவிற்கும், மான்செஸ்டருக்கும் இடையே ஊஞ்சலாடுகிறது. உகாண்டாவில் நடக்கும் இறுதிச் சடங்கில், கணவன் இறந்த பிறகு, மாதவிடாய்த் துணியை அணிந்து கொள்ள வலியுறுத்தப்படும் மனைவி, பின் அதைக் கணவன் பிணத்தின் குறிமேல் போர்த்த வேண்டும்.  இச்சடங்கை வெறுத்து மறுதலிக்கும் ந்னாம், மான்செஸ்டரில் உள்ள தன்னுடைய வீட்டில் அவனது உள்ளாடைகளுடன் கூடிய உடைமை பெட்டியை முற்றிலுமாக அகற்றிவிட்டு தன் ஆடைகளை களைந்து முழு நிர்வாணமாய் தன் வீட்டின் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கிறாள்.

ந்னாமின் கணவனாக இருந்தாலும் சரி, ‘ஆயிரமாண்டு பிரார்த்தனைகள்’ கதையில் வரும் சீனத்தந்தையாக இருந்தாலும் சரி அவர்களுடைய பண்பாடு சார்ந்த தரப்பையும் நியாயப்படுத்தும் சித்தரிப்புகள் இக்கதை ஆசிரியர்களின் நடுநிலைப் பார்வைக்கு ஒரு சான்று.

இக்கதைகளை வாசிக்கும்போது எழுந்த ஆச்சரியங்களில் முக்கியமான ஒன்று, ஒரு அறிமுக எழுத்தாளரால் எப்படி இவ்வளவு நுட்பமாக உணர்வுகளை சித்தரிக்க முடிகிறது என்பதுதான். ஆனால், சற்று நேரத்தில் இவை மொழிபெயர்ப்புக் கதைகள் என்றுணர்ந்ததும் இந்த ஆச்சரியம் குறைந்தாலும், மூலக் கதையோடு தன்னை ஆத்மார்த்தமாக பிணைத்துக் கொண்ட படைப்பூக்கம் கொண்ட படைப்பாளியால் மட்டுமே இவ்வளவு சிறப்பான மொழிபெயர்ப்பைத் தரமுடியும் என்ற நிதர்சனம் புரிகிறது. நரேனின் படைப்பூக்கத்திற்கு வாழ்த்துக்கள்.

என் முதல் பேட்டி

மொழிபெயர்ப்பு சிறுகதை வெளியீட்டை முன்னிட்டு ஜெயமோகன் தளத்தில் வெளியான என் முதல் பேட்டி:

https://www.jeyamohan.in/129059#.XkLMl1Iza00

சென்ற சில ஆண்டுகளாகவே விஷ்ணுபுரம் அமைப்பின் முதன்மைச் செயல்பாட்டாளர்களில் ஒருவராக விளங்கி வருபவர் நரேன். தொடர்ச்சியாக மொழியாக்கங்களை செய்து வருகிறார். அவருடைய முதல் மொழியாக்கச் சிறுகதைத் தொகுதி ‘இந்தக்கதையைச் சரியாகச் சொல்வோம் வெளிவந்துள்ளது
உங்களைப்பற்றி..(கல்வி/ பணி/ குடும்பம்)
நான் வேலுர் மாவட்டத்தில் திருவலம் என்ற பாலாற்றாங்கரை கிராமத்தில் பிறந்தவன். அப்பா G.மணி அம்மா L.K. சசிகலா இருவரும் தபால் துறையில் அதிகாரிகளாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். தங்கை ம.ரேவதி மேலாண்மையில் முதுகலை முடித்து தனியார் வங்கி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.  பள்ளிப் படிப்பை இராணிப்பேட்டையில் முடித்த பின், காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கரா கலைக் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றேன். இக்காலங்களில்தான் வாசிப்பின் தொடர்ச்சியாக எழுதிப் பார்க்கும் முயற்சிகளில் ஈடுபடத் தொடங்கினேன். நாடகங்கள் எழுதி இயக்கி மாநில அளவில் பரிசுகள் வென்றேன். இறுதியாண்டில் விகடன் மாணவ பத்திரிகையாளனாக தேர்வாகி காஞ்சிபுரம் மற்றும் வேலூர் மாவட்டத்தின் வாழ்க்கைக் கதைகளை கட்டுரைகளாக விகடன் குழும இதழ்களில் எழுதினேன். கணினி பயன்பாட்டியலில் முதுகலை பட்டப் படிப்பிற்காக கோவை பி.எஸ்.ஜி. தொழில் நுட்பக்  கல்லூரியில் சேர்ந்த நாள் முதல் நான் கோவைக் குடிமகனாக மாறினேன். ஆறு வருட அமெரிக்க வாசத்திற்குப் பிறகு கடந்த மூன்று ஆண்டுகளாக கோவையில் வசித்து வருகிறேன்.
இலக்கிய பரிச்சயம் எப்படி நிகழ்ந்தது? ஆதர்சங்கள் யார்?
எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் எங்கள் வீட்டில் குமுதமும் ஆனந்த விகடனும் வாங்குவார்கள். அதில் ஜோக்குகளையும் துணுக்குகளையும் எழுத்து கூட்டி வாசிக்கத் தொடங்கிய எனக்கு அவற்றில் வரும் தொடர் கதைகளை என் பெற்றோர்கள் சிரத்தையாக வாராவாரம் கிழித்து இறுதியாக புத்தகமாக கோர்த்து வைத்தது ஆர்வமூட்டுவதாக இருந்தது. எங்கள் இல்லத் தயாரிப்பில் என் பெற்றோர்கள் பதிப்பித்த நாவல்கள்தான் நான் வாசிக்கத் தொடங்கியதின் ஆரம்பப் புள்ளி. சுஜாதா தனது கட்டுரைகளில் குறிப்பிடும் எழுத்தாளர்கள் எங்கள் வீட்டு சேகரிப்பில் இல்லாதபோது நான் இராணிப்பேட்டை நூலகரை அணுகுவேன். அப்படித்தான் என் பன்னிரெண்டாம் வகுப்பு விடுப்பில் விஷ்ணுபுரத்தை அவரிடம் கேட்டு நின்றேன். எப்படி தருவித்துக் கொடுத்தார் என்று எனக்கு இப்போது பிரமிப்பாக இருக்கிறது. பொருள் ஒன்றும் கொள்ளாமல் எழுத்து கூட்டி வாசித்து முடித்தேன். ஜெயமோகனை மூடி வைத்து அதுவரை வந்திருந்த அத்தனை இந்திரா பார்த்தசாரதி நாவல்களையும் வாசித்தேன். பிரபஞ்சன், பாலகுமாரன், எஸ்.ரா., சாரு என்று தொடர்ந்த நான் இரண்டு வருடங்களில் ஜெயமோகனிடம் வந்து மீண்டும் தஞ்சமடைந்தேன். அன்றிலிருந்து அவரின் வலைப்பூ, வலைத்தளம், மின்னஞ்சல் குழு என்று அவரை மானசீகமாக என் ஆசானாக ஏற்று அவரை மெளனமாக பின் தொடர்ந்தேன். சரியாக ஈரேழு வருடங்கள் கழித்து முதன்முறையாக அவரை சந்திக்கும் வாய்ப்பை பெற்றேன்.
இவற்றுக்கிடையில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் நாஞ்சில் நாடன் அவர்களின்  சிறுகதைகளை வாசிக்கத் தொடங்கிய நான் ஜெயமோகன் அவரை முன்வைத்த பின் தீவிரமாக பற்றிக்கொண்டேன். அவரின் நாவல்களும் சிறுகதைகளும் எனக்குள் வேறு ஒருகோணத்தில் திறக்கத் தொடங்கின. கோவையில் அவரை ஏதேச்சையாக சந்தித்துப் பேசியதும் அமெரிக்காவில் அவருடன் மூன்று நாட்கள் தொடர்ந்து பயணம் செய்ததும் என்னை அவருக்கு மிக அணுக்கமானவராக உணரச் செய்தது.
இலக்கியத்தை நோக்கும் எனது பார்வையை திருத்தி வாசிப்பின் மீதும் எழுத்தின் மீதும் என் ஆர்வத்தை இறுக்கிப் பூட்டிய வண்டியைப் போல செலுத்தும் நாஞ்சிலும் ஜெயமோகனுமே எனக்கு ஆதர்சங்கள்.
இந்தத் தொகுப்பின் கதைகளை  மொழியாக்கம் செய்த அனுபவம் மற்றும் சவால்கள் என்ன? 
முதன்முறையாக இத்தனை நூறு வார்த்தைகளை மொழிபெயர்க்கத் தொடங்கியபோது எனக்கு அத்தனையுமே சவாலாக இருந்தன. வார்த்தை தேர்வில் இருந்து வாக்கிய நீளத்தை தக்க வைப்பது வரை. உதாரணமாக ஒரு நீண்ட வாக்கியத்தில் அலைக்கழியும் ஒரு பாத்திரத்தின் உணர்வுகளை ஆசிரியர் தொகுத்திருப்பார். முதல் வார்த்தையில் “ஆம்” என்று தொடங்கி அவ்வரியின் இறுதியில் “இல்லை” என்றாகி நின்றிருக்கும். அவ்வாக்கியம் ஒரு உணர்வின் எழுத்துப் பிரதி. ஓடும் ஆற்றின் அடியில்தானே என்று ஒரு கூழாங்கல்லை எடுத்தாலும் ஆறு தடம் மாறுவதைப் போன்ற பிரமையில் தவித்திருக்கிறேன். போகப் போக ஆசிரியரும் பாத்திரமும் அவர்கள் எழும்பி நின்றிருக்கும் வார்த்தைகளும் என் மொழியுமேகூட எனக்கு புலப்படத் தொடங்கின.
சவாலுடன் கூடிய சுவாரசியமாக அமைந்தது இக்கதைகளின் வரலாற்றுப் புலங்களை அறிந்துகொண்டது. மற்றும் வெவ்வேறு மொழிகளில் உள்ள பெயர்களையும் உரையாடல்களையும் தமிழில் அப்படியே மொழி மாற்றி எழுதும்போது அதன் உச்சரிப்புகளை தேடி தெரிந்து கொண்டது.
எந்த அடிப்படையில்  மொழியாக்கம் செய்யவும் தொகுப்பாக்கவும் நீங்கள் கதைகளை  தேர்வு செய்கிறீர்கள்?
சமகால உலகச் சிறுகதைகளை வாசிக்கும் ஆர்வத்தில்தான் ஆங்கில இலக்கிய மின் இதழ்களில் வரும் சிறுகதைகளை வாசிக்கத் தொடங்கினேன். மொழிபெயர்க்கும் கலையை பயிலும் முயற்சியாக வாசித்ததில் பிடித்த கதைகளை மொழிபெயர்த்துப் பார்த்தேன். அது கிட்டத்தட்ட சுயமாக ஒரு சிறுகதை எழுதும் அனுபவத்தை ஒத்திருப்பதைப் போன்ற உணர்வு எனக்கு பெரும் திறப்பாக அமைந்தது. கதையின் மொழி பிரதிபலிக்கும் அவ்வாசிரியனின் உணர்வை நேரடியாக புரிந்துகொள்ள முடிந்தது. புதிதாய் ஒன்றை படைக்கும் அகமகிழ்வை தந்ததால் தொடர்ந்து நான் வாசித்த சிறந்த சிறுகதைகளை மொழிபெயர்க்கத் தொடங்கினேன். அப்படி சமகால ஆங்கில பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகளை தொகுக்கும் அளவிற்கு மொழிபெயர்த்தேன். ஆங்கில குறுநாவல், சிறுகதை தளங்களில் தற்போது பெண் எழுத்தாளர்களின் பங்கு மிகப் பெரியது. பிற்பாடு, அதிகம் விவாதிக்கப்பட்ட பரிசு பெற்ற சிறுகதைகளை கவனிக்கத் தொடங்கியபோது அவை பெரும்பாலும் புலம் பெயர்ந்தவர்களின் சிறுகதைகளாகவோ அல்ல புலம் பெயர்தலைப் பற்றிய சிறுகதைகளாகவோ இருந்தன. தொடர்ந்து அச்சிறுகதைகளை மொழிபெயர்த்து இப்போது அது தொகுப்பாக வரவிருக்கிறது.
என் வாசிப்பில் சிறந்ததென உணரும் சிறுகதைகளை மொழிபெயர்க்கத் தொடங்கி பின் அதன் மைய ஓட்டத்தை ஒத்திருக்கும் சிறுகதைகளை தேடத் தொடங்கிவிடுகிறேன். சிறந்ததெனத் தோன்றும் பட்சத்தில் அவற்றை மொழிபெயர்த்து அக்கதைகளை சற்று நெருங்கி அணுக முற்படுகிறேன். கீழைத்தேசங்களின் கதைகள், மேற்கத்திய வாசகர்களின் பொரித்த அவலாக மாறாமல் நேர்மையாக சொல்லப்படும் கதைகள், என் விருப்பத்திற்குரியவனாக இருக்கின்றன.
இந்த நூல் வழி நீங்கள் பெற்றதென்ன? இந்த நூலின் சமகால முக்கியத்துவம் என்ன?
பரவலாக அறியப்படும் சமகால வரலாற்று நிகழ்வுகளில்கூட இன்னும் கண்டறியப்படாத பதுங்கு சுரங்கங்களைப் போல பல்வேறு சிதைவுகளும் அதன் பிறகான கதைகளும் இருப்பது அறிய வரும்போது வரலாறு எனக் கொள்வது எதை என்ற கேள்வியை எழுப்பியது.  ஆப்பிரிக்க நாடுகளின் கதைகள், பண்பாடு, விழுமியங்கள் என்று நமக்கு சொல்லப்பட்டிருந்தவை அங்கிருந்து எழுந்து வந்து மேற்குலகின் மொழி பயின்ற ஒருவரின் சொற்களாக வெளிவரும்போது அவை திருத்தப்பட்டு  நேர்மையாக திருப்பிச் சொல்லப்படுகிறன.  அங்கும் இங்குமென தொடர்ந்து நமக்கு சொல்லப்படும் கதைகளும் நாம் தேடி அறிந்துகொள்ளும் வரலாறும் இரண்டு பக்கமிருந்தும் நம்மை இழுத்து ஒரு நிலையில் நிறுத்துகின்றன. வெறும் தகவல்களாலும் செய்திகளாலும் நாம் அவற்றை புரிந்து கொள்வதைக் காட்டிலும் ஒரு புனைவாசிரியனின் உள்ளுணர்வை புரிந்துகொள்வது முக்கியம் என்று படுகிறது.
உலகெங்கிலும் இலக்கியம், தேசம் அழிக்கும் போர்களில் தொடங்கி ஒரு கூரையின் கீழ் உணர்வுகள் மிதிபடும் உறவுகள் வரை, வன்முறைக்கு எதிராக உரக்க மன்றாடுகிறது. இந்த உயிர் விதை பிளந்து வருவது எங்கிருந்தோ வரும் ஒரு பூட்ஸ் அடியில் நசுக்கப்படுவதற்கல்ல.  இக்கதைகள் அனைத்தும் வன்முறையின் ஒரு துளி உருவாக்கும் சிதைவுகளைப் பற்றி பேசுகின்றன. அடிப்படைவாதமும் அதன் ஆதரவாக எழும் ஒற்றைத் தன்மையிலான மூர்க்கமும் அழிவுகளை நோக்கியே இழுத்துச் செல்லும் என்று சொல்கின்றன. உலமயமாக்கல் நமக்கு ஈட்டித் தந்த “உலகக் குடிமகன்’ என்ற கருத்து நிதர்சனமானதுதானா? முப்பதாண்டுகளில் நாடுகள் முன்னெப்போதையும்விட எல்லைகளை மூடி, தேசிய உணர்வுகளைப் பெருக்கி, அன்னியன் எவன் என்பதை வரையறுக்கத் தொடங்கியிருக்கும் இக்காலத்தில் இக்கதைகள் நமக்கு பிற்காலத்தில் எஞ்சியிருக்கப்போவது என்ன என்று காட்டுகின்றன.
அடுத்து என்ன?
வியட் தன் குவென் எழுதிய புலிட்ஸர் பரிசு பெற்ற நாவலை மொழி பெயர்க்கும் எண்ணத்தில் இருக்கிறேன். வியட்னாம் போரின் பின் நாட்களை அடிப்படையாக வைத்து ஒரு உளவாளியின் கதை இது. சொந்தமாக சில சிறுகதைள் எழுதிப் பார்க்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டிருக்கிறேன்.

இந்தக் கதையை சரியாகச் சொல்வோம் - முன்னுரை

என் மொழிபெயர்ப்பில் வெளிவந்திருக்கும் "இந்தக் கதையை சரியாகச் சொல்வோம்" சிறுகதை தொகுப்பிலுள்ள முன்னுரை. பதிப்பாளர் ஜீவ கரிகாலனுக்கும் யாவரும் பதிப்பகத்திற்கும் என் நன்றிகள்.



தற்கால ஆங்கில இலக்கியத்தில் சிறுகதைகளின் இடம் அநேகமாக இல்லாமல் ஆகியிருக்கும் ஒரு சூழலில் 2000க்குப் பிறகு ஒரு சிறு அலையைப் போல புலம் பெயர்ந்த எழுத்தாளர்களின் சிறுகதைகள் மேலெழத் தொடங்கியுள்ளன. கடந்த பத்தாண்டுகளில் சிறந்த ஆங்கிலச் சிறுகதைகளின் பட்டியலை நோக்குங்கால் பெருவாரியான சிறந்த கதைகள், விருது பெற்றவைகள் புலம் பெயர்ந்தவர்களின் கதைகளாகவே இருக்கின்றன. இவர்கள் அகதிகளாகவோ அல்லது தொழில் நிமித்தமாகவோ 80-களின் தொடக்கத்தில் பிரிட்டனுக்கும் அமெரிக்காவிற்கும் குடிபெயர்ந்தவர்களின் முதல் தலைமுறை மக்கள்.
இவர்கள் மேற்கத்திய குடிமகன்களாகவே வளர்ந்தாலும் தன் வேரைக் கண்டடையும் தேடல் இவர்களுக்குள் இருக்கிறது. இரண்டு கலாசாரங்களுக்கு இடையிலான மோதல் இவர்களுக்குள் கேள்விகளை எழுப்புகின்றன. குடிபெயர்ந்தவர்கள் தன் இருப்பை நிலைநாட்டும் போராட்டத்தில் தன் பூர்வீகத்தை மொத்தமாக மறந்து மேற்கத்திய வாழ்வில் ஒன்றிணையும் முனைப்பில் இருக்க அடுத்த தலைமுறையோ தராசுத் தட்டின் நடுமுள் போல இரு கலாசாரங்களையும் அளந்து பார்க்க முற்படுகிறார்கள். வெற்றிபெற்றவர்களின் வெற்றிகளை கேள்விக்குள்ளாக்குகிறார்கள். ஏற்கனவே விவாதிக்கப்படும் உறவுச் சிக்கல்கள் இவர்கள் பார்வையில் வேறொரு பரிணாமம் பெறுகின்றன. அப்படியான சில புலம்பெயரிகளையும் அவர்களின் சிறுகதைகளையும் தமிழ் வாசகப் பரப்பிற்கு அறிமுகப்படுத்துவதே இத்தொகுப்பின் நோக்கம்.
கடந்த இருபதாண்டுகளில் உலகமயமாக்கல் கொணர்ந்த தனிமனித சுதந்திரமும் உலகக் குடிமகன் என்ற கருத்துருவாக்கமும் அதன் எதிர்வினையாகப் பெருகி வரும் தேச இன உணர்வுகளும் வளர்ந்துவரும் நாடுகளில் சிக்கலான வாழ்வியல் சூழல்களை உருவாக்கியுள்ளது. அதே நேரத்தில் பன்னெடுங்காலமாக போர்களையும் மரணங்களையும் தோற்றுவித்து வரும் நிலங்களிலிருந்து மக்கள் வெளியேறி வாழும் வாய்ப்புகளும் மறுக்கப்படுகின்றன. புது நிலங்களில் தங்கள் வாழ்வு வெறும் பிழைத்திருப்பதிலிருந்து ஒரு படியேனும் மேலோங்கியிருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.
அடுத்த நிலையில் புலம்பெயர்தல், ஒரு ஆறுதலான அல்லது ஒரு வசதியான சூழ்நிலையில் அது அமைந்திருந்தாலும் அப்புது மண்ணின் மனிதர்களாக மாறுவதற்கு எத்தனை தலைமுறைகள் தேவைப்படும், இழக்கும் உறவுகளும் மொழியும் பண்பாடும் எதிலிருந்து மீண்டும் முளைக்கும்? இந்த விவாதங்களை எழுப்புவதினாலேயே இச்சிறுகதைகள் உலகத்தன்மையுடன் அனைவருக்குமான கதைகளாக மாறுகின்றன.
தற்கால உலகச் சிறுகதையாசிரியர்களை தேடி வாசிக்கையில், அவர்கள் பெரும்பாலும் புலம்பெயரிகளாக இருப்பதையும் அவர்களின் கதைகளின் மையம் இடமாற்றங்களின் வழியே மனிதர்கள் தங்களுக்குள் கண்டடையும் வாழ்வின் அர்த்தங்களையும் அபத்தங்களையும் அறிந்துகொள்ள முயல்வனவாக இருப்பதையும் அறியமுடிகிறது. தமிழ்ச் சூழலில் அறியப்படாத இவ்விளம் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்துவது, தற்போது உலகமெங்கும் நிலவும் அகதிகளின் மீதான விவாதங்களினிடையில் அவசியமாகிறது. மேற்கு உலகிற்கு அணுக்கமான குரல்களாக இல்லாமல் கீழைத்தேசங்களிலிருந்தும் ஆயுத உரமேந்திய யுத்த நிலங்களிலிருந்தும் உரத்த உண்மையான குரல்களில் இவை வெளிவருகின்றன. இவர்களின் மூலமாக புலம்பெயரிகளின் கதைகள் இப்போது சரியாக சொல்லப்படுகின்றன.
என் இலக்கிய வாசிப்பிற்கும் ரசனைக்கும் செழுமை சேர்த்ததில் விஷ்ணுபுர இலக்கிய வட்டத்திற்கும் கோவை சொல்முகம் வாசகர் குழும நண்பர்களுக்கும் பெரும் பங்கு உண்டு. கதைகள் தேர்விலும் தட்டச்சுவதிலும் உடனிருந்து உதவிய தோழி கனிமொழிக்கும் துணையாயிருந்த தங்கை ரேவதிக்கும் நன்றிகள். இம்மொழிபெயர்ப்பை தொடர்ந்து செய்திட எனக்கு தூண்டுதலாக இருந்த நண்பர் செல்வேந்திரனுக்கு தனிப்பட்ட நன்றிகள். இத்தொகுப்பை வெளிக்கொண்டு வரும் யாவரும் பதிப்பகத்திற்கும் திரு. ஜீவகரிகாலனுக்கும் உளமார்ந்த நன்றிகள். இருபது வருடங்களாக ஆத்மார்த்தமாகவும் நேரிடையாகவும் வாசிப்பிலும் வாழ்விலும் குருவென்றான என் ஆசான் ஜெயமோகனுக்கு என் வணக்கங்கள்.