Thursday, February 7, 2013

கடல்


                                                                   
வெயிலும் உதிர் மணலும் தினம் மீட்டெடுக்கும் கருவாட்டு வாழ்க்கை-உப்பு கரிக்கும் முதல் பாதி மணியின் புது அலை. கிறித்துவ இறையியலையே வானமும் கடலுமாய் கொள்ளும் சமூகத்திற்க்கு தேவனும் சாத்தானுமே கண்படும் எல்லைகள். இந்த இரண்டு எல்லைகளையும் வெவ்வேறு தருணங்களில் தொட்டு திரும்பும் நான்கு பாத்திரங்களின் கதையை திரைமொழிந்ததில் பாதிதான் வெற்றி.

பியாட்ரிஸ் - தமிழ் திரையின் ஒரு தேவ மகளாய் வரவேண்டியவள் வெரும் சினிமா லூசுப் பெண்ணாக மட்டுமே எஞ்சிப்போகிறாள். முதல் பாதி பார்த்து ”இது என் படம் போலவே இல்லையே” என நினைத்தோ என்னவோ மணி காபி குடித்த பின் காட்சிகளை வெட்டி எறிந்திருக்கிறார். கதையை கரையிலேயே வைத்து விட்டு தடாலடியாக இறுதி சண்டைக்கு நடுக்கடலில் குதித்து விடுகிறார்.

திரையில் தோன்றும் அத்துனை துணைப் பாத்திரங்களும் அட்டகாசம். கெளதமும் துளசியும் அழகு. தோற்றமே நடிப்பாகிப் போனதில், அர்விந்த்சாமி நடிசிருக்கார். ஆனால் அர்ஜுன் சார் - இது உங்க போட் இல்லை......!!!

மஞ்சளும் நீலமுமாய் ராஜீவின் கண்சிமிட்டாத காமிரா வண்ணமயம். ரஹ்மானுடன் சேர்ந்து வைரமுத்துவும் கார்க்கியும் மணியை திணறடிக்கிறார்கள். ஈடு கொடுக்க முடியாமல், பாடல் காட்சியமைப்பில் கற்பனை வறண்டு மணி இன்னமும் “அலைபாய்ந்து’க்கொண்டே இருக்கிறார்.

“எனக்கு வீட்ல சோறு இல்லை, அதான் விடுதியில சேர்ந்தேன்” - “எனக்கு வீட்ல தியானம் இல்லை. அதை தேடி தான் இங்க சேர்ந்தேன்”என வசனங்களிலேயே கதையின் தளங்களை நிறுவிக்கொண்டே செல்கிறார் ஜெ.எம். உன்னிப்பாக கவனித்தால் குறைந்தபட்சம் அறுபது நாகை
வட்டார வசவு சொற்களை கற்கலாம். நாவல் வடிவிற்க்காக காத்திருப்போம்.

கரைக்கும் கடலுக்கும் மாற்றி மாற்றி இழுத்துப்போடும் அலையின் மீதான மனிதர்களின் வாழ்க்கையை பாதியில் தொலைத்த பாவத்திற்க்கு மணி பொறுப்பேற்க்க வேண்டும். பலமான நங்கூரமிட்ட கப்பல் இரண்டாம் பாதியின் இரண்டாம் பாதியில் மூழ்கிப்போகிறது. கரை சேராதது கப்பல் மட்டுமல்ல கடலும் தான்.