Friday, May 1, 2015

உத்தமன் வில்லன்!

கமலிடம் பிடித்தது பாதி பிடிக்காதது பாதி என கலந்து செய்த கலவை இது. இடைவேளைக்கு முன் பின் என பிரிக்காமல் அது இரண்டற கலந்திருப்பதுதான் பிரச்சினையே. உண்மையில் கமலுக்கு அதுதான் இப்படத்தின் பிரதான உத்தியாக தோன்றியிருக்க வேண்டும். அதாவது, "இரண்டு கதைகளை வெட்டி காட்சிகளை Non-linear முறையில் அடுக்கி - Nolan அளவிற்க்கு குழப்பமெல்லாம் இல்லை; இரண்டு linear கதைகளை வெட்டி ஒன்று மாற்றி ஒன்றாக அடுக்கி - 'சாகா வரம் போல் சோகம் இல்லை' என மரணம் உணர்த்தும் உயர் தத்துவ கோட்பாட்டோடு முடிக்க வேண்டும்."
'who's the hero' என தானே எழுதி தற்பெருமை படாதபடி அதில் தானே ஆடி நடித்து, கயிறு பிடித்து எகிறி உதைத்து.. இப்படி எந்த பந்தா படலமும் இல்லாமல் கமல் அறிமுகமாகும் படம் சகலகலா வல்லவ காலத்திற்கு பிறகு இதுவாகத்தான் இருக்கும். அறிமுகம் மட்டும் அல்ல. படம் முழுதும் கமல் ஹீரோ செய்வது எதையும் செய்வதே இல்லை. முரணாக கதையில் அவர் அகிலம் போற்றும் உலக நாயகன். குடிபோதையில் தன் படத்தின் முதல் காட்சி திரையிடும் அரங்கின் பாத்ரூமிலேயே உருண்டு விழும் நாயகன். டாக்டரோடு ஊர் அறியா காதல், தன்னை உத்தமனாக நேசிக்கும் மனைவி, வில்லனாக பார்க்கும் மகன் என முதல் 15 நிமிடங்களிலேயே கதையின் premise அட்டகாசமாக நிறுவப்படுகிறது.
சினிமா பற்றிய சினிமா அதுவும் கமலிடமிருந்து என புரிந்தவுடனேயே அது கிளப்பிய உற்சாகம் இன்னும் பசியாரவேயில்லை. சமீபத்தில் வெளிவந்த Meta-movie க்களுக்கு ஏற்பட்ட அதே கதிதான் இங்கும். கதைக்குள் கதை. நம்மை உள்ளிழுத்து செல்லும் வெளிப்புறம் மிக பலமாக இருந்து உள்மடிப்பில் பொதிந்து இருக்கும் கதையும் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளேயே விருப்பத்தோடு தொலைந்து போக செய்ய வேண்டும். ஒரு Maze போல. அதற்கு பதிலாக "ஆஹா ...உள்ளே வந்து மாட்டிகிட்டோமோ" என தோன்றினால் வெளியேற பதறி அங்கும் இங்கும் அலைய வேண்டியிருக்கும். தியேட்டரில் நிஜமாகவே exit தேடி அங்கும் இங்கும் அலையும் zombieக்களை பார்க்க முடிந்தது. (கிட்டத்தட்ட மூன்று மணிநேரம்) இதே பிரச்சினை சமீபத்திய ஜிகர்தண்டாவிலும், 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படங்களிலும் இருந்தது. அதில் மிக பலவீனமானது உ.வி. மரணம் பிடித்து இழுக்கும் ஒரு சாதனையாளன் கடைசியாக செய்ய வேண்டியதை குறித்து துரிதப்படுகிறான். நேர்மாறாக உட்கதையில் மரணம் அண்டவேமுடியாத ஒரு சாமானியன். இந்த இரண்டு வரி அழகான சிந்தனையை கமலாலேயே கூட வெற்றிகரமாக தமிழ் சினிமாவில் புனைய முடியவில்லை!

மீண்டும் மார்கதரிசியும் (கே.பி.) மனோவும் சேர்ந்து - ஏற்கனவே கதைப்படி 5 கிளாசிக்குகள் கொடுத்தவர்கள் - ஒரு காமெடி படம் அதுவும் அகில் உலக நாயகனின் கடைசி படமாக இருக்ககூடிய படம் எடுத்தால் அதுவும் அந்த படத்தை நமக்கே காட்டும்போது எப்படி இருக்க வேண்டும். எப்படியோ இல்லையென்றாலும் குறைந்த பட்சம் கிரேசி மோகன் நாடகம் போலாவது? ஒரு புலிகேசி? தெனாலிராமன் (original)? ம்ஹூம்...! வசனம் யார் என்று கமல் creditல் போடாதபோதே அதில் ஏதோ உள்குத்து நெருடியது. 'எடை-இடை-உடை' மாதிரி கமலின் அச்சு பிச்சு தனம் தூக்கல். எனக்கு தெரிந்ததெல்லாம் மக்களுக்கு சென்று சேர வேண்டும் என்ற ஆர்வம் ஒரு பக்கம் இருக்கட்டும். அதில் எது இங்கு தேவை என்பதுதானே முதல் விதி, எந்த கதைக்கும்? தான் ஒரு வில்லுபாட்டுக்காரன் என்பதாலே உத்தமன் கதைக்கு உத்தம வில்லன் என பெயர் (அர்ச்சுனன் - வில்லாளி - வில்லனாம்..) ஆனால் உத்தமன் நிகழ்த்தும் கலை தெய்யம். ஏன்? கடைசி பாடல் என்னதான் வாய் பிளக்கவைத்தாலும்..(கொட்டாவியும்).
ஹரி பகவான் தோன்றும் முன்னரே "சொறி.. சொறி.." என பாடி வைக்கும் எந்த 'கிரேசி'த்தன காமெடியும் எங்குமே பொருந்தாமல் போனது பெரும் சோகம். கிச்சு கிச்சு மூட்டியாவது கரை சேர வேண்டும் என்ற பயமே தெரிந்தது. பூஜா குமார் கடைசி காட்சியில் "ஹே.. அல்லா.." என்று கதறுகிறார் திடீரென.படத்தில் ஹரியும் ஜேகப்பும் இருப்பதலா.. இங்கு சுயமரியாதை சம்மட்டியெல்லாம் அவசியம் தானா?இந்தா வெச்சுக்கோ என கமல் அள்ளி வீசும் "எனக்கு தெரியும்" களெல்லாம் துருத்திக் கொண்டு துருக்கி வரை துரத்துகிறது. கமல் திறமைக்கு தகர தராசு எதற்கு (ஸாரி... impact..!) கமலும் கமல் சார்ந்த அழுது வடியும் காட்சிகளே பரவாயில்லை என தோன்றியது. ஊர்வசியும் M.S.பாஸ்கரும் டிராமாவை இனிமையாக்குகிறார்கள். சத்தமேயில்லாமல் ஜெயித்திருப்பது கிப்ரான் தான். ஒரு நிமிஷம் இருப்பை உதறி கவனித்தால் பின்னணியில் ஒவ்வொரு காட்சியோடும் நம்மை அமர்த்தி வைத்திருப்பது இவர்தான் என்பது புரியும்.
இது நல்லாயிருக்கே.. அது நல்லாயிருக்கே என சேர்த்துகொண்டே போவது சிறந்த சினிமா எழுத்து அல்ல. Minimalism தான் நவீன சினிமாவின் முதல் விதி. இது கமலுக்கும் தெரிந்தேதான் இருக்கும். ஆனால் எந்த வியாபார கட்டாயமோ தொடர்ந்து கமலின் திரைக்கதை சோர்வையே கொடுக்கிறது. ஒரு பேட்டியில் மணி ரத்னம் "ஏற்கனவே சொல்லிட்ட மாதிரி இருந்தா அந்த காட்சியை வெட்டி விடுவோம். ஒரு படத்தில் ஒரு உணர்வுக்கு ஒரு செய்திக்கு ஒரு காட்சி தான் இருக்க வேண்டும்" என்றார்.
உ.வி. ல் ஒரு நெகிழ்ச்சியான காட்சி. கமல் தன் பையனிடம் "என்ன பண்ணாலாம்னு இருக்க?" என அவன் எதிர்கால வாழ்கையின் திட்டம் பற்றி கேட்க அதை இப்போது கேட்பதின் அர்த்தம் புரிந்து அழுது கொண்டே "கொலம்பியா சென்று சினிமா கல்லூரியில் படித்து உங்களுக்காக ஒரு சிறந்த திரைக்கதை எழுதனும்பா. நீங்க யாருன்னு இந்த ஊருக்கு காட்டனும்பா" என்பான். அந்த கட்டாயம் இப்போது கமலுக்கே இருப்பதாக படுகிறது.