இந்தக் கதையை சரியாகச் சொல்வோம் தொகுப்பின் மீது மொழிபெயர்ப்பாளர் சிறில் அலெக்ஸின் மதிப்புரை
‘இந்தக் கதையைச் சரியாகச் சொல்வோம்’ – சிறுகதைத் தொகுப்பு
மொழிபெயர்ப்பாளர்: நரேன்
மனித வரலாறென்பது குடிபெயர்தலின் கதைதான், ஒருவகையில்.
மனிதக் குடிகள் உருவாகியபோது அனைத்தையும் பகுக்கவும் வகுக்கவும் முறைகள் உருவாகின, உறவுகள் துவங்கி நில எல்லைகள் வரை அனைத்தும் வரையறுக்கப்பட்டன. இவ்வரையறைகளின்மீது அமைப்புக்கள் உருவாகி வந்தன. ஆழ்ஞானம் மதமாகியது புறஞானம் அறிவாகியது இடைப்பட்டது தத்துவமாக எஞ்சியது. கலைகள் இவற்றிலிருந்து உருவாகின. மொழி மனதின் வேகத்தில் விரிவடைந்தது. இவை அனைத்துமே எரிகுளம்புகள் வெளிவந்து உறைந்து பாறையாவதைப்போன்ற ஒரு சுழற்சியில் நிகழ்ந்தன, தொகுக்கப்பட்டு பண்பாடாகின. தனிமனிதன் குடும்பத்தில் இணைந்தான் குடும்பம் கிராமமாக, கிராமம் குடியாக, குடி அரசாகப் பேரரசாக விரிவடைந்தன. பேரரசுக்கள் உறைந்துபோன பண்பாடுகளை உட்கொண்டும் ஆட்கொண்டும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தின. அவை பொங்கியெழுந்து மீண்டும் உறைந்தன. குடிபெயர்தல் என்பது இடம்பெயர்தல் மட்டுமல்லவே. குடிபெயராத சமூகங்கள் இடம்பெயரும் நீராதாரங்களால் கைவிடப்படும் குட்டைகளைப்போல தேங்கிப்போகின்றன. வளர்ச்சிக்கு அடிப்படை என்றாலும் குடிபெயர்தல் பெரும் பதட்டத்தைத் தரக்கூடிய ஒரு மானுட அனுபவமே.
நரேன் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்துள்ள ‘இந்தக் கதையை சரியாகச் சொல்வோம்’ தொகுப்பு இத்தகைய பதட்டமும் குழப்பமும் வெளிப்படும் குடிபெயர்ந்தோரின் கதைகளாலானதாகும். மேலைப் பண்பாடு கொண்ட நாடுகளுக்கு குடிபெயர்ந்தோரின் கதைகள் இவை எனச் சொல்லலாம். குறிப்பாக அமெரிக்கா இங்கிலாந்து நாடுகளுக்குக் குடிபெயர்ந்தவர்களின் கதைகளை நரேன் தேர்ந்தெடுத்திருக்கிறார். இக்கதைகள் வழியே நாம் உலகை மேற்கு கிழக்கு என இரண்டாகப் பிரித்துவிட முடியும். ஒரு கதையைத் தவிர மற்றவை அனைத்துமே குடும்பங்களை, உறவுகளை மையமாகக் கொண்டவை. இது அவரது தேர்வில் இருக்கும் பொதுத்தன்மையா அல்லது குடிபெயர்ந்தவர்களின் ஆதாரப் பிரச்சனை குடும்பங்கள் அல்லது உறவுகள்தானா என்பது எஞ்ச்சும் கேள்வி.
மேற்குலகம் குடும்ப அமைப்புக்கு முற்றிலும் எதிரானதும் அல்ல. அங்கே ஆழ்ந்த உறவுகள் இல்லை என்பதுவும் ஒரு மேலோட்டமான பார்வையே. நாம் நம்ப விரும்புவதைவிட மேற்கத்திய கலாச்சாரத்தில் ஆழமான, உண்மையான உறவுகளும், குடும்பத்தின் மாண்பினைப் போற்றும் மத, கலாச்சார அமைப்புக்களும் அரசியல் இயக்கங்களும் தீவிரமாகவே உள்ளன. தன் மணவாழ்க்கையில் நேர்மையாக நடந்துகொள்ளாத ஒருவர் அரசியலில் வெற்றி கொள்வது அங்கே மிகக் கடினம். ஆனால் கிழக்கில் அது ஒரு பொருட்டல்ல. அதே நேரம் மேற்குலகில் தனிமனித உரிமைகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் குடும்ப அமைப்புக்கு சவால்களை உருவாக்குகின்றன. இவை இரண்டுமே அதனதன் சாதக பாதகங்களைக் கொண்டவை. குடும்பம் அதன் மிக பாதகமான நிலையில் கொடூரமான அடக்குமுறையும் வன்முறையும் நிறைந்த அமைப்பாகிவிடுகிறது, தனி மனிதச் சுதந்திரம் அதன் மோசமான எல்லையில் அரசின்மைக்கும் ஒழுக்கமின்மைக்கும் சுய அழிப்பிற்குமே இட்டுச்செல்லலாம் . குடும்பம் அதன் சாதகமான எல்லையில் ஒரு குழந்தை வளர்வதற்கான ஆகச் சரியான அமைப்பாக விளங்குகிறது. சீரான குடும்பங்கள் சீரான சமூகங்களையும் உருவாக்குகின்றன. தனிமனித விடுதலையின் சாதகமான எல்லையில் தனி மனிதன் எந்தக் கட்டுக்களும் இன்றி தன் முழுத்திறனையும் கொண்டு புதிய உச்சத்தை அடைய முடியும். குடும்பம் தனிமனிதன் எனும் இவ்விரு புள்ளிகளும் ஒன்றை ஒன்று சார்ந்திருந்தாலும் அவற்றிற்கிடையே பெருந்தூரங்கள் எளிதில் உருவாகிவிட முடியும் என்பதை இக்கதைகளிலிருந்து புரிந்துகொள்ள முடியும்.
இவற்றில் கிழக்கு மேற்கு என்ற பண்பாட்டுப் பிரிவை நாம் உருவாக்க முடியும் என்றாலும் திருப்பும்தோறும் வண்ணம் மாறும் ஒரு கலைடாஸ்கோப்பின் சுவாரஸ்யமும் இவற்றில் உள்ளன. முதல்கதையிலேயே இதைக் காணலாம். அமெரிக்காவில் குடியேறிய ஒரு சீனப் பெண்ணின் தந்தை ஒரு பெர்ஷியப் பெண்ணுடன் உரையாடுவதில் இக்கதை துவங்குகிறது. உடைந்த ஆங்கிலத்தில் அவர்கள் உரையாடிக்கொள்கின்றனர். கதையில் சீனத் தந்தையின் திருமணத்திற்கு வெளியேயான நட்பு அல்லது காதல் அதற்காக அவர் செய்த தியாகம் அது அவரது குடும்பத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை ஒருபக்கமும் அவரது குடிபெயர்ந்த மகள் தன் முதல் திருமணத்தை முறித்துக்கொண்டு இரண்டாவது ஆண் நண்பரிடம் உறவாடிக்கொண்டிருக்கிறாள். அவள் முதல் திருமணத்தை முறித்துக்கொண்டதற்கான காரணம் அவளுக்குச் சீன மொழி சரியாகத் தெரியாது என்பது. ‘மொழி’ இத்தொகுப்பின் பல கதைகளிலும் தலையாய பிரச்சனையாக வருகிறது குறிப்பிடத்தக்கது. தாய்மொழி சரியாகத் தெரியாமல் போவது தாய்ப்பண்பாட்டிலிருந்து ஒருவரை அறுபடச் செய்துவிடுகிறதை இக்கதையும் குறிப்பிடுகிறது. (ஆயிரமாண்டு பிரார்த்தனைகள் – A Thousand Years of Good Prayers – by Yiyun Li– சீன- அமெரிக்கர்?)
இரண்டாவதுகதை உள்நாட்டுப் போரிலிருந்து தப்பிச்செல்லும் ஒருவரின் கதை. நாட்டின் உட்பகுதியிலிருந்து துறைமுகத்தை நோக்கி தப்பியோடி வரும் ஒருவன் திக்கற்ற நிலையில் ஒரு அறிமுகமற்றவரின் (ஆப்ராஹீம்) உதவியைப் பெறுகிறான். கப்பலில் ஏற்றப்படும் பெட்டிகள் ஒன்றில் சுருண்டு அமர்ந்து அவர் அங்கிருந்து வெளியேற வேண்டும். எல்லாவற்றிற்கும் அந்த அறிமுகமற்றவர் துணைபுரிகிறார். ஒரு அகதியின் அடிப்படைத் தேவை உயிர்வாழ்ந்திருத்தல்தான் பிற மதிப்பீடுகள் அவனுக்குப் பெரும் சுமைகள் என்று இக்கதையின் முடிவை எடுத்துக்கொள்ளலாம். இது சொல்லப்பட்டிருக்கும் விதமும் சிறப்பாக உள்ளது, அதிலும் ஒரு கதை அல்லது கரு உள்ளது. அகதியாய் வந்த தன் தந்தையின் கதையை ஆசிரியையாயிருக்கும் மகள் கல்லூரியில் சொல்கிறாள். அதன் மூலம் அவள் பெயர் பெறுகிறாள். (ஒரு நேர்மையான வெளியேற்றம் – An Honest Exit – By Dinaw Mengestu– எத்தியோப்பியா)