Friday, April 4, 2014

‪‎மான்கராத்தே‬


ட்ரெயிலர் பார்த்து யூகித்த கதை அப்படியே மார்ஜின் மிகாமல் எழுதப்பட்டு படமாகியிருக்கிறது. அவுட் ஆஃப் தி பாக்ஸ் திங்க்க வேண்டும் என்பதாலோ கதை என முருகதாஸ் பெயர் வைத்து டைட்டில் போட்டதாலோ முதல் பத்து நிமிடமும் கிளைமாக்ஸ் சண்டைக்கு  முன்னதான பத்து நிமிடமும் ஆச்சர்ய அட்ராசிட்டி!

ஓபனிங் சாங், முட்டிகால் டான்ஸ் என சிவகார்த்தி ஒரு "காமெடி" விஜய் ஆக ஏக வாய்ப்பு. (பத்ரியும் ஒரு காமெடி படம் தானே? #டவுட்) அனால் இன்னொரு சந்தானம் ஆகாமல் இருந்தால் சரி. உண்மையில் ஒருசில ஒன் லைன்கள் தவிர சிவா வராத திருக்குறள் இன்டர்வியூ காட்சிதான் அதகளம்.

காதலிக்காக உயிரையே விட துணிந்தாலும் உயிரை விடவே முடியாத சிவா, படிக்காத பொறுப்பில்லாத தறுதலை பிள்ளையானாலும் நல்ல பிள்ளை! "எனக்கெல்லாம் இந்த  
மாதிரி
பொண்ணு கிடைக்குமா"னு சீரியஸாவே வில்லனிடம் புலம்பும் அளவுக்கு வெள்ளை சாயம் பொம்மை ஹன்சிகா. அப்புறம் மூணு பாட்டு ஒரு இடைவேளை ரெண்டு பாட்டு ஒரு சண்டை!

இதில் வித்தியாசம் என்னவென்றால் நண்பர்களுக்காக ஒரு ஹீரோ தயாராகிறான். உண்மையில் குத்துச் சண்டை வீரனாகி வெல்வதெல்லாமே அந்த கும்பளுக்காகதான். நண்பர்கள் நண்பர்களாவதே ஹீரோ ஹீரோ ஆன பிறகுதான் என்பது உட்கதை. (வெள்ளித்திரையில் கண்டபின் இதை படிக்கோணும்)


அநியாயத்திற்க்கு கேட்ட பார்த்த பழகிய காட்சிகள் வசனங்கள். லிப்ட் திறந்தால் ஹன்சிகா நிற்பதும் வம்சி வீட்டு காலிங்க்பெல் அடிப்பது சிவா என்றும் ரைட்டர் இங்க் நிரப்பும் முன்னரே இங்க தெரிந்த விஷயம். வலிய வலிய வட்டி கட்டியாவது வம்சி வில்லனாகிறார். சதீஷ் மட்டும் சிரிக்க வைப்பதோடு இயல்பாகவும் தோன்றுகிறார். சூரி வரும் காட்சிகளில் அவர் இதற்கு முன்னால் நடித்த படங்களை நினைத்து சிரித்து வைக்கிறோம். ரம்மியமான லைட்டிங் கலர்புல் லேஅவுட் என காமிரா தான் புள்ளிமான். பாடல்கள் ஏற்கனவே ஹிட் அடித்திருக்க பின்னணியில் தன்னால் இயன்ற அளவுக்கு பெஃப் ஏற்றுகிறது இசை.

பின்பாதியில் நிலைகுலையுமளவு சும்மா குத்து குத்தென்று குத்தி எடுக்கிறார்கள். அவசரகதியில் அவசியமே இல்லாமல் ஒரு டாஸ்மாக் பாட்டு. அணிருதும் முருகதாசும் வேறு காட்சி கொடுத்து சிறப்பு சேர்க்க... மிடில..! குறைந்தபட்சம் மான் கராத்தே என்றால் என்னவென்றாவது கோச் சொல்லுவாரென்று பார்த்தல் அதை வேடிக்கை பார்க்கும் யாரோ சொல்லி தொலைக்கிறார். இசை விமர்சகர் ஷாஜி முழு நேர நடிகர் ஆகிவிட்டாரா என்ன! மான் கராத்தேவெல்லாம் ஹீரோ இமேஜ்க்கு ஒத்து வராது என்பதால் அது டைட்டிலில் மட்டுமே அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

எதைப்பற்றியும் யோசிக்காமல் சிவகார்த்தியை நம்பி படம் எடுக்கும் அளவிற்கு மார்க்கெட் உயர்ந்திருப்பது சந்தோஷம். 600 திரையரங்குகள் திரையிடும். டிவிக்களில் கூவி கூவி விற்க குடும்ப சகிதம் பார்த்து சிரிக்க, அடுத்த வாரம் இதன் வெற்றி விழா கொண்டாடப்படும்.

Thursday, February 13, 2014

பாலு மகேந்திரா - அஞ்சலி

திருவான்மியூரிலிருந்து சின்மாயா நகர் வரை வந்து கூத்துப்பட்டறை நாடங்களை பார்த்துக்கொண்டிருந்த நாட்களது. நொடிந்து நொடிந்து முடியும் தெருக்கள் ஒன்றின் ஓரத்தில் உயர்ந்த கூரை கொண்ட கூடாரம் முன் வண்டி நிறுத்தி நின்றேன். "இன்னும் கவுன்ட்டர் திறக்கலை.
கொஞ்சம் வெயிட் பண்ணுங்க." என்று ஒப்பனை இட்ட பெண்ணொருத்தி சொல்லி சென்றாள். நாடகம் தொடங்க இன்னும் அரை மணிநேரம் இருக்க எனக்கு அடுத்து இரண்டாவதாக வெள்ளை சொகுசு கார் ஒன்று தயங்கி தயங்கி சந்தில் நுழைந்து சாந்தமாய் அமைந்தது. காரிலிருந்து இறங்கியவரின் தொப்பி மீது விழுந்த பார்வை விரியும் முன்னரே மண்டையில் உரைத்தது அது திரு. பாலு மகேந்திரா என்று. அறிவிலும் உணர்விலும் நிழலாடிய ஒரு மகா கலைஞனின் பிம்பம் இறங்கி என்னை கடந்து சென்றது. நளினமுற்ற ஒரு காற்றுருவம் போல் உள்ளே நுழைந்து மறைந்தார்.


நடிகர்களும் நடத்துனர்களும் அங்குமிங்கும் ஓடியபடி இருக்க சீட்டு வாங்கி உள்ளே நுழைந்தேன். படிக்கட்டுகளாய் அமைக்கப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து நடிகர்களற்ற மேடையையே உற்று பார்த்துக் கொண்டிருந்தார். அனிச்சையாகவே அவருக்கு அடுத்த வரிசையில் அவர் கால் வைத்திருந்த படியில் இரண்டடி தள்ளி அமர்ந்தேன். அநேக முப்பது நொடிகளுக்கு யாருமற்ற மேடைக்கு நாங்கள் இருவர் மட்டுமே இரசிகர்கள். இரண்டொருவர் வந்து அமர சலனம் கூடியது. அமைப்பாளர்களில் ஒருவர் பாலு அவர்களிடம் எதோ கையில் கொடுத்து பேசி சென்றது என் விழியோரத்தில் படமாகியது.

மிகச் சன்னமான ஒரு குரல் பின்னாலிருந்து ஒலித்தது. "தம்பி இதை பூசிக்கோங்க. கொசு கடிக்காது. பூசிட்டு பக்கத்துல கொடுத்திடுங்க...."

"தேங்க்ஸ்..." என்றேன். அவர் கண்ணை கூட நோக்கவில்லையென்று
இப்போது தோன்றுகிறது.

பரமார்த்த குரு நாடகம் தொடங்கியது. கொசு தடுப்பு மருந்தின் வாசனை நாசியில் நிறைந்தது. முட்டாள்கள் சூழும் கதை வளர்ந்தது. கூட்டம் கலைய பாலு மகேந்திரா எழுந்து வெளியே நடக்க நாடகம் நிறைவுற்றது.

கலைஞர்களின் மரணம் கனத்த மௌனத்தை போன்றது. தானாக கலைந்து விடியும்வரை காத்திருந்து மீள வேண்டும்.