Friday, May 1, 2015

உத்தமன் வில்லன்!

கமலிடம் பிடித்தது பாதி பிடிக்காதது பாதி என கலந்து செய்த கலவை இது. இடைவேளைக்கு முன் பின் என பிரிக்காமல் அது இரண்டற கலந்திருப்பதுதான் பிரச்சினையே. உண்மையில் கமலுக்கு அதுதான் இப்படத்தின் பிரதான உத்தியாக தோன்றியிருக்க வேண்டும். அதாவது, "இரண்டு கதைகளை வெட்டி காட்சிகளை Non-linear முறையில் அடுக்கி - Nolan அளவிற்க்கு குழப்பமெல்லாம் இல்லை; இரண்டு linear கதைகளை வெட்டி ஒன்று மாற்றி ஒன்றாக அடுக்கி - 'சாகா வரம் போல் சோகம் இல்லை' என மரணம் உணர்த்தும் உயர் தத்துவ கோட்பாட்டோடு முடிக்க வேண்டும்."
'who's the hero' என தானே எழுதி தற்பெருமை படாதபடி அதில் தானே ஆடி நடித்து, கயிறு பிடித்து எகிறி உதைத்து.. இப்படி எந்த பந்தா படலமும் இல்லாமல் கமல் அறிமுகமாகும் படம் சகலகலா வல்லவ காலத்திற்கு பிறகு இதுவாகத்தான் இருக்கும். அறிமுகம் மட்டும் அல்ல. படம் முழுதும் கமல் ஹீரோ செய்வது எதையும் செய்வதே இல்லை. முரணாக கதையில் அவர் அகிலம் போற்றும் உலக நாயகன். குடிபோதையில் தன் படத்தின் முதல் காட்சி திரையிடும் அரங்கின் பாத்ரூமிலேயே உருண்டு விழும் நாயகன். டாக்டரோடு ஊர் அறியா காதல், தன்னை உத்தமனாக நேசிக்கும் மனைவி, வில்லனாக பார்க்கும் மகன் என முதல் 15 நிமிடங்களிலேயே கதையின் premise அட்டகாசமாக நிறுவப்படுகிறது.
சினிமா பற்றிய சினிமா அதுவும் கமலிடமிருந்து என புரிந்தவுடனேயே அது கிளப்பிய உற்சாகம் இன்னும் பசியாரவேயில்லை. சமீபத்தில் வெளிவந்த Meta-movie க்களுக்கு ஏற்பட்ட அதே கதிதான் இங்கும். கதைக்குள் கதை. நம்மை உள்ளிழுத்து செல்லும் வெளிப்புறம் மிக பலமாக இருந்து உள்மடிப்பில் பொதிந்து இருக்கும் கதையும் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளேயே விருப்பத்தோடு தொலைந்து போக செய்ய வேண்டும். ஒரு Maze போல. அதற்கு பதிலாக "ஆஹா ...உள்ளே வந்து மாட்டிகிட்டோமோ" என தோன்றினால் வெளியேற பதறி அங்கும் இங்கும் அலைய வேண்டியிருக்கும். தியேட்டரில் நிஜமாகவே exit தேடி அங்கும் இங்கும் அலையும் zombieக்களை பார்க்க முடிந்தது. (கிட்டத்தட்ட மூன்று மணிநேரம்) இதே பிரச்சினை சமீபத்திய ஜிகர்தண்டாவிலும், 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படங்களிலும் இருந்தது. அதில் மிக பலவீனமானது உ.வி. மரணம் பிடித்து இழுக்கும் ஒரு சாதனையாளன் கடைசியாக செய்ய வேண்டியதை குறித்து துரிதப்படுகிறான். நேர்மாறாக உட்கதையில் மரணம் அண்டவேமுடியாத ஒரு சாமானியன். இந்த இரண்டு வரி அழகான சிந்தனையை கமலாலேயே கூட வெற்றிகரமாக தமிழ் சினிமாவில் புனைய முடியவில்லை!

மீண்டும் மார்கதரிசியும் (கே.பி.) மனோவும் சேர்ந்து - ஏற்கனவே கதைப்படி 5 கிளாசிக்குகள் கொடுத்தவர்கள் - ஒரு காமெடி படம் அதுவும் அகில் உலக நாயகனின் கடைசி படமாக இருக்ககூடிய படம் எடுத்தால் அதுவும் அந்த படத்தை நமக்கே காட்டும்போது எப்படி இருக்க வேண்டும். எப்படியோ இல்லையென்றாலும் குறைந்த பட்சம் கிரேசி மோகன் நாடகம் போலாவது? ஒரு புலிகேசி? தெனாலிராமன் (original)? ம்ஹூம்...! வசனம் யார் என்று கமல் creditல் போடாதபோதே அதில் ஏதோ உள்குத்து நெருடியது. 'எடை-இடை-உடை' மாதிரி கமலின் அச்சு பிச்சு தனம் தூக்கல். எனக்கு தெரிந்ததெல்லாம் மக்களுக்கு சென்று சேர வேண்டும் என்ற ஆர்வம் ஒரு பக்கம் இருக்கட்டும். அதில் எது இங்கு தேவை என்பதுதானே முதல் விதி, எந்த கதைக்கும்? தான் ஒரு வில்லுபாட்டுக்காரன் என்பதாலே உத்தமன் கதைக்கு உத்தம வில்லன் என பெயர் (அர்ச்சுனன் - வில்லாளி - வில்லனாம்..) ஆனால் உத்தமன் நிகழ்த்தும் கலை தெய்யம். ஏன்? கடைசி பாடல் என்னதான் வாய் பிளக்கவைத்தாலும்..(கொட்டாவியும்).
ஹரி பகவான் தோன்றும் முன்னரே "சொறி.. சொறி.." என பாடி வைக்கும் எந்த 'கிரேசி'த்தன காமெடியும் எங்குமே பொருந்தாமல் போனது பெரும் சோகம். கிச்சு கிச்சு மூட்டியாவது கரை சேர வேண்டும் என்ற பயமே தெரிந்தது. பூஜா குமார் கடைசி காட்சியில் "ஹே.. அல்லா.." என்று கதறுகிறார் திடீரென.படத்தில் ஹரியும் ஜேகப்பும் இருப்பதலா.. இங்கு சுயமரியாதை சம்மட்டியெல்லாம் அவசியம் தானா?இந்தா வெச்சுக்கோ என கமல் அள்ளி வீசும் "எனக்கு தெரியும்" களெல்லாம் துருத்திக் கொண்டு துருக்கி வரை துரத்துகிறது. கமல் திறமைக்கு தகர தராசு எதற்கு (ஸாரி... impact..!) கமலும் கமல் சார்ந்த அழுது வடியும் காட்சிகளே பரவாயில்லை என தோன்றியது. ஊர்வசியும் M.S.பாஸ்கரும் டிராமாவை இனிமையாக்குகிறார்கள். சத்தமேயில்லாமல் ஜெயித்திருப்பது கிப்ரான் தான். ஒரு நிமிஷம் இருப்பை உதறி கவனித்தால் பின்னணியில் ஒவ்வொரு காட்சியோடும் நம்மை அமர்த்தி வைத்திருப்பது இவர்தான் என்பது புரியும்.
இது நல்லாயிருக்கே.. அது நல்லாயிருக்கே என சேர்த்துகொண்டே போவது சிறந்த சினிமா எழுத்து அல்ல. Minimalism தான் நவீன சினிமாவின் முதல் விதி. இது கமலுக்கும் தெரிந்தேதான் இருக்கும். ஆனால் எந்த வியாபார கட்டாயமோ தொடர்ந்து கமலின் திரைக்கதை சோர்வையே கொடுக்கிறது. ஒரு பேட்டியில் மணி ரத்னம் "ஏற்கனவே சொல்லிட்ட மாதிரி இருந்தா அந்த காட்சியை வெட்டி விடுவோம். ஒரு படத்தில் ஒரு உணர்வுக்கு ஒரு செய்திக்கு ஒரு காட்சி தான் இருக்க வேண்டும்" என்றார்.
உ.வி. ல் ஒரு நெகிழ்ச்சியான காட்சி. கமல் தன் பையனிடம் "என்ன பண்ணாலாம்னு இருக்க?" என அவன் எதிர்கால வாழ்கையின் திட்டம் பற்றி கேட்க அதை இப்போது கேட்பதின் அர்த்தம் புரிந்து அழுது கொண்டே "கொலம்பியா சென்று சினிமா கல்லூரியில் படித்து உங்களுக்காக ஒரு சிறந்த திரைக்கதை எழுதனும்பா. நீங்க யாருன்னு இந்த ஊருக்கு காட்டனும்பா" என்பான். அந்த கட்டாயம் இப்போது கமலுக்கே இருப்பதாக படுகிறது.

Saturday, April 18, 2015

வண்ணங்களின் வரையறை!!

இளவயது ஆண் பெண் உறவுகளின் சிக்கல்களையும் அழகியல்களையும் எவ்வளவு சொல்லியும் தீராது. அது பலசமயம் வெறும் அர்த்தமற்ற வேகம் என்றபோதிலும்.
ஒரே கான்வாஸில் விதவிதமான ஓவியங்களை தீட்டுவதில் மணிரத்னம் மிக கைதேர்ந்தவர். அதிலும் இந்தமுறை வீடியோ கேம் வகை காதல். அதீத வண்ணங்களால் ஆன கதாபாத்திரங்கள். எதையுமே சட்டென தேடி தாவி ஓடி பிடித்து வென்றுவிட முடியுமென ஒரு முனைப்பு. செத்து செத்து விளையாடும் விளையாட்டு தானே...நிரந்தரமான எந்த முடிவிற்கும் தயாராகாத மனநிலை. இது காதாலா என்று கூட முடிவெடுக்க முடியாத ஒரு உறவு தாராவிற்க்கும் ஆதிக்கும். திருமணத்தில் நம்பிக்கை இல்லை. அதற்கு ஒரு காரணத்தை புனைய இக்கதை முனைந்தாலும் அது அவசியமற்றதும் கூட.
வேறு வேறு நாட்டிற்கு செல்லும் கனவுகளோடு கடைசி சில மும்பை மாதங்களை ஒன்றாக கொண்டாட முடிவெடுத்து வாழும் வீட்டின் அடுத்த அறையில் நீண்ட தாம்பத்தியத்தை ஒரு கனிந்த பழத்தைப் போல நிதானமாக சுவைத்து மகிழும் கணபதி தம்பதியினர். பல காட்சிகளில் இவர்களின் அறைக் கதவுகளின் மெல்லிய இடைவெளியின் ஒளியில் காதலின் முற்றிலும் முரணான இரு வேறு கோணங்கள் பரிமாரிக்கொள்ளப்படுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக நினைவுகளை இழந்து வரும் மனைவியின் வியாதியை தனது மீதி வாழ்க்கையாக கொள்ளும் கணவனின் காதல்; இழப்பதற்க்காகவே நினைவுகளை சேகரிக்கும் ஒரு கலர்ஃபுல் காதல். சிறு பிரிவுகள் சிறு கூடல்கள்; இரண்டிலுமே நாடகமற்ற விளையாட்டுகளும் கனவுகளும் "சின்னஞ் சிறு ரகசியங்களும்"!

முதல்முறையாக ஆதியும் தாராவும் ஒரு அறையில் கழிக்க நேரும் ஒரு இரவின் பாடலில் "பறந்து செல்லவா.." என தாராவின் தொலைதூர கனவுகள் இவர்களின் இடையில் ஒரு பாதுகாப்பான தடையை உருவாக்கினாலும் அடுத்த சந்தர்ப்பத்தில் "நானே வருகிறேன்.." என இடைவெளிகளை கடந்து ஒன்று கூடுகிறார்கள். ஒன்றாக மிச்ச காலத்தை கழிக்க நினைத்து குடிபுக அனுமதி கேட்கும் காட்சியை தொடரும் பாடல் - "மலர்களை கேட்டேன் வனமே தந்தனை..தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை.." பாடல்களின் வரிசையும் வரிகளும் கதையின் ஓட்டத்தை நியாயப்படுத்தும் இந்த அழகு கடைசியாக எந்தப் படத்திலும் வந்ததாக நினைவில்லை. மணியின் படங்களையே இதற்க்காக மீண்டும் ஒரு முறை பார்க்க ஆவல் மேலிடுகிறது. ஆச்சரியமாக, "ஹே சினாமிகா.." பாடலின் ஒரு வரி - "சீரும் சினாமிகா" ஆங்கில சப்-டைட்டிலில் "Seething Sinamika" என்று அர்த்தமும் எதுகை மோனையும் கூட கெடாமல் வந்திருந்தது!!!
சிறு முறைப்புகளுக்கு பிறகு ஆதியிடம் கணபதி உரிமை கொள்ளும் காட்சி பிரஷர் குக்கர் நீராவி படர்ந்து தெளிவது போல காட்சிப்படுத்தியிருப்பது ஒரு உதாரணம். மணியும் பி.சி.யும் விளையாடியிருக்கிறார்கள். சீண்டுவதர்க்கென்றே ஆங்காங்கே "அலைபாயுதே" காட்சிகளை நினைவுபடுத்தும் கோணங்களும் உண்டு. பேருந்து பின் சீட் பயணம், எலெக்ட்ரிக் டிரெயின் என பழகிய இடங்களே. உண்மையில் அலைபாயுதே போலவே இதிலும் இரண்டு ஜோடிகள். ஏதோ ஒரு வகையில் ஒருவரின் வாழ்க்கையை இன்னொரு காதல் மாற்றியமைக்கிறது. அனால் முந்தையதில் பிரியாமல் இருப்பதற்காக தாலி கட்டி கல்யாணம் செய்து பின்பு பிரிவின் விளிம்பில் ஊசல்; இதில் பிரிவு நிச்சயம் என திருமணமற்ற உறவின் விளிம்பில் காதல். மிகச் சிறிய ஒரு கோடு. ஆனால் இந்தமுறை அழுத்தம் திருத்தமாக, விலாவரியாக வரைந்திருக்கிறார் மணி.
விதவிதமான பயணங்களில் வாழ்க்கை. எதை நோக்கியோ சென்றுக்கொண்டிருக்கும் போது எதிர்பாராத திசையில் திரும்பி சலசலத்து ஓடும் நதி இது. வெவ்வேறு நிறங்களாக பிரிந்து தான் சென்று சேரும் இடங்களை தேடி அலைந்துக் கொண்டிருந்தாலும் இந்த வண்ணங்கள் அறுபடும் ஓரிடத்தில் காதல் மீண்டும் தூய ஒளியாக மட்டுமே எஞ்சுகிறது.

Friday, February 6, 2015

என்னை அறிந்தால்...


தன் அப்பாவை கொன்ற மெல்லிய கோட்டுக்கு இந்தப் பக்கம் இருக்கும் ஒரு தாதாவை கோட்டுக்கு அந்தப் பக்கம் இருக்கும் ஒரு போலீஸ்தான் கொல்ல முடியும் என்பதை உணர்ந்த சிறுவன் கோட்டுக்கு எந்தப் பக்கம் போனான் என்பதுதான் கதை... இல்லையில்லை. ....பதுதான் "ஒரு" கதை. நாட்டுக்காக நண்பனாக நடிக்கப்போய் தன்னால் ஏமாற்றப்பட்ட இப்போது வில்லனாகிவிட்ட அந்த நண்பனிடமிருந்து தன்னையும் வீட்டையும் நாட்டையும் காப்பாற்றுவது இன்னொரு கதை. தன் மனைவியாகப் போகும் ஒரு பெண்ணை மனைவியாகப் போகும் நாளில் (அதாவது திருமண நாளில்) கொன்ற அதே நண்ப வில்லனை பழிவாங்குவதும் ஒரு கதை. உடல் உறுப்பு கடத்தலுக்காக குறிவைக்கப் பட்டிருக்கும் ஒரு அழகான பெண்ணை பறந்து பறந்து காப்பாற்றுவதும் மற்றொரு கதை. அந்த கடத்தலுக்கு தலைவனாக அதே நண்ப வில்லனே அமைவது ஒரு தனி கதை. இதில் வேறு ஏதேனும் கதைகள் விடுபட்டிருந்தால் சகலரும் மன்னிப்பாராக.
படங்களில் கதைகள் இல்லையென யார் சொன்னது. கௌதம் மேனன் இயக்கிய எல்லா படங்களின் கதைகளும் இதிலேயே உள்ளது. ஒரு கேட்டலாக் மாதிரி. ஹாரிஸ் அமைத்த எல்லா பாடல்களின் மாதிரியும் இதிலேயே உள்ளது என்பது சொல்லமலே புரிவது!

கௌதமிற்கு எப்போதும் அழகிய கனவுகள் உண்டு. என்னதான் ஆங்கிலத்தியே பேசும் அம்மா இருந்தாலும் குடும்பம் பெருங்கடனில் இருக்கும்போது உள்ளங்கையிலேயே அளந்து அமெரிக்காவிற்கு மகனை காதலிப்பதற்காக அனுப்பி வைக்கும் அப்பா போல. அஜீத்தும் குழந்தையை கூட்டிக்கொண்டு நான்கு வருடம் வெவ்வேறு மாநிலங்களில் வாழ்கிறார். போலீஸ் வேலையை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் பழைய பன்னீர்செல்வமாக வருகிறார். ஆனால் போலீஸ் ஷு மட்டும் தான் போடுவார். யூனிபார்ம்லாம் இல்லை. ஏன்னா அவர் தான் போலீஸ்லியே சேரலையே. வெறும் போலீஸ் துணையோடு வில்லன்களை பந்தாடுகிறார். நாட்டுக்கு இப்படி நாலு வேலையை ராஜினாமா செய்த போலீஸ் இருந்தால் எப்படி இருக்கும். சம்பளம் மிச்சம். நாலு வருடம் ஊர் ஊராக செலவு செய்து சுற்றி வந்த பின்னும் அனுஷ்காவுக்கு காவலானாக பாஸ்டன் வரை போய் வருகிறார். இதிலெல்லாம் லாஜிக்கே இல்லை என்பது கதாசிரியருக்கு தெரியாதா என்ன. இருந்தாலும் கனவுகள் அல்லவா. கனவுகளுக்கு ஏது லாஜிக். (ரெண்டு நாளைக்கு முன்னாடி பார்த்த "இசை" எப்படியெல்லாம் உதவுது.)





அஜீத் அழகாக இருக்கிறார், காபி விளம்பரத்தில் பார்த்தது போலவே. படம் முழுவதும் விளம்பரம் போலவே எழுந்துட்டேன் வந்துட்டேன்னு எங்கிருந்தாவது எழுந்து எழுந்து வந்து கொண்டே இருக்கிறார். ஆனாலும் படம் பார்க்க போதிய காரணமாக அவர் மட்டுமே இருக்கிறார். திரிஷாவிற்கும் அனுஷ்காவிர்க்கும் சம அளவில் வேலையின்மை. பாராட்டுக்கள். பரதநாட்டியம் என்ற பேரில் திரிஷாவின் மேடை நாடகம் ஒன்று வருகிறது. என்னதான் அது!?

சிற்சில காதல் கணங்கள், உச்ச கட்ட ஹீரோ வில்லன் சேசிங், எட்டி பார்க்கும் நாசர் பாத்திரம், தெள்ளத்தெளிவான கேமரா கோணங்கள் உடல் உறுப்பு கடத்தல் என ஆங்காங்கே என்னை அறிந்தால் தெரிகிறது. த்ரிஷா அஜித் எபிசொட் மட்டும் அப்படி ஒரு ஆழம். இதை மட்டுமே படமா எடுத்து எங்க உயிரை ப்ரீயா விட்டு இருக்கலாமேன்னு தோன்றாமல் இல்லை.. யாருடைய கோணத்தில் கதை சொல்லப்படுகிறது என்பதிலும் அவ்வளவு குழப்பம். க்ளோஸ் அப் காட்சிகள் மட்டும் இல்லையென்றால் எது உரையாடல் எது மனக்குரல் என கண்டுபிடிப்பது கஷ்டம். முக்கிய வசனத்தை (எல்லோருமே கொஞ்சம் முக்கி முக்கி தான் பேசுறாங்க) கூட "ஏதோ மனசுல நினைச்சுகிட்டாங்க போல" என தவறாக புரிந்து கொள்ளும் அபாயம் உண்டு. நடிகர்களின் வாயையே பார்க்க வேண்டியது அவசியம். அனுஷாவிற்கு கூட கௌதம் மேனோனே டப்பிங் கொடுத்துட்டரோ என்ற சந்தேகம் எனக்கு மட்டும் தானா? எல்லோருமே அவரைப் போல பல்லைக் கடித்துக் கொண்டு வாயின் கொஞ்ச இடைவெளியில் தான் பேசுகிறார்கள். படம் முழுதும் ஏதோ ஒரு பாத்திரம் மாறி மாறி தன் குரலில் கதையை நர்ரேட் செய்துக்கொண்டே இருக்கிறது. படம் முடிந்ததும் வேறு வழியில்லாததால் கௌதமே நர்ரேட் செய்து "இப்போது படம் முடிந்தது" என்கிறார்.

கொடுத்த காசுக்கு துவம்சம் செய்திருப்பது ஹாரிஸ் மட்டுமே. தனித்தனியாக ஒவ்வொருத்தர் காதுக்குள்ளும் வந்து வாசி வாசியென்று ....சிக்கிறார். அடிக்கும் அடியில் அசந்து தூங்கிக்கொண்டிருந்தவர்கலெல்லாம் "என்னை எழுப்பினால்" என எழுந்து கிளம்பிக்கொண்டிருந்தார்கள்.