Friday, February 6, 2015

என்னை அறிந்தால்...


தன் அப்பாவை கொன்ற மெல்லிய கோட்டுக்கு இந்தப் பக்கம் இருக்கும் ஒரு தாதாவை கோட்டுக்கு அந்தப் பக்கம் இருக்கும் ஒரு போலீஸ்தான் கொல்ல முடியும் என்பதை உணர்ந்த சிறுவன் கோட்டுக்கு எந்தப் பக்கம் போனான் என்பதுதான் கதை... இல்லையில்லை. ....பதுதான் "ஒரு" கதை. நாட்டுக்காக நண்பனாக நடிக்கப்போய் தன்னால் ஏமாற்றப்பட்ட இப்போது வில்லனாகிவிட்ட அந்த நண்பனிடமிருந்து தன்னையும் வீட்டையும் நாட்டையும் காப்பாற்றுவது இன்னொரு கதை. தன் மனைவியாகப் போகும் ஒரு பெண்ணை மனைவியாகப் போகும் நாளில் (அதாவது திருமண நாளில்) கொன்ற அதே நண்ப வில்லனை பழிவாங்குவதும் ஒரு கதை. உடல் உறுப்பு கடத்தலுக்காக குறிவைக்கப் பட்டிருக்கும் ஒரு அழகான பெண்ணை பறந்து பறந்து காப்பாற்றுவதும் மற்றொரு கதை. அந்த கடத்தலுக்கு தலைவனாக அதே நண்ப வில்லனே அமைவது ஒரு தனி கதை. இதில் வேறு ஏதேனும் கதைகள் விடுபட்டிருந்தால் சகலரும் மன்னிப்பாராக.
படங்களில் கதைகள் இல்லையென யார் சொன்னது. கௌதம் மேனன் இயக்கிய எல்லா படங்களின் கதைகளும் இதிலேயே உள்ளது. ஒரு கேட்டலாக் மாதிரி. ஹாரிஸ் அமைத்த எல்லா பாடல்களின் மாதிரியும் இதிலேயே உள்ளது என்பது சொல்லமலே புரிவது!

கௌதமிற்கு எப்போதும் அழகிய கனவுகள் உண்டு. என்னதான் ஆங்கிலத்தியே பேசும் அம்மா இருந்தாலும் குடும்பம் பெருங்கடனில் இருக்கும்போது உள்ளங்கையிலேயே அளந்து அமெரிக்காவிற்கு மகனை காதலிப்பதற்காக அனுப்பி வைக்கும் அப்பா போல. அஜீத்தும் குழந்தையை கூட்டிக்கொண்டு நான்கு வருடம் வெவ்வேறு மாநிலங்களில் வாழ்கிறார். போலீஸ் வேலையை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் பழைய பன்னீர்செல்வமாக வருகிறார். ஆனால் போலீஸ் ஷு மட்டும் தான் போடுவார். யூனிபார்ம்லாம் இல்லை. ஏன்னா அவர் தான் போலீஸ்லியே சேரலையே. வெறும் போலீஸ் துணையோடு வில்லன்களை பந்தாடுகிறார். நாட்டுக்கு இப்படி நாலு வேலையை ராஜினாமா செய்த போலீஸ் இருந்தால் எப்படி இருக்கும். சம்பளம் மிச்சம். நாலு வருடம் ஊர் ஊராக செலவு செய்து சுற்றி வந்த பின்னும் அனுஷ்காவுக்கு காவலானாக பாஸ்டன் வரை போய் வருகிறார். இதிலெல்லாம் லாஜிக்கே இல்லை என்பது கதாசிரியருக்கு தெரியாதா என்ன. இருந்தாலும் கனவுகள் அல்லவா. கனவுகளுக்கு ஏது லாஜிக். (ரெண்டு நாளைக்கு முன்னாடி பார்த்த "இசை" எப்படியெல்லாம் உதவுது.)





அஜீத் அழகாக இருக்கிறார், காபி விளம்பரத்தில் பார்த்தது போலவே. படம் முழுவதும் விளம்பரம் போலவே எழுந்துட்டேன் வந்துட்டேன்னு எங்கிருந்தாவது எழுந்து எழுந்து வந்து கொண்டே இருக்கிறார். ஆனாலும் படம் பார்க்க போதிய காரணமாக அவர் மட்டுமே இருக்கிறார். திரிஷாவிற்கும் அனுஷ்காவிர்க்கும் சம அளவில் வேலையின்மை. பாராட்டுக்கள். பரதநாட்டியம் என்ற பேரில் திரிஷாவின் மேடை நாடகம் ஒன்று வருகிறது. என்னதான் அது!?

சிற்சில காதல் கணங்கள், உச்ச கட்ட ஹீரோ வில்லன் சேசிங், எட்டி பார்க்கும் நாசர் பாத்திரம், தெள்ளத்தெளிவான கேமரா கோணங்கள் உடல் உறுப்பு கடத்தல் என ஆங்காங்கே என்னை அறிந்தால் தெரிகிறது. த்ரிஷா அஜித் எபிசொட் மட்டும் அப்படி ஒரு ஆழம். இதை மட்டுமே படமா எடுத்து எங்க உயிரை ப்ரீயா விட்டு இருக்கலாமேன்னு தோன்றாமல் இல்லை.. யாருடைய கோணத்தில் கதை சொல்லப்படுகிறது என்பதிலும் அவ்வளவு குழப்பம். க்ளோஸ் அப் காட்சிகள் மட்டும் இல்லையென்றால் எது உரையாடல் எது மனக்குரல் என கண்டுபிடிப்பது கஷ்டம். முக்கிய வசனத்தை (எல்லோருமே கொஞ்சம் முக்கி முக்கி தான் பேசுறாங்க) கூட "ஏதோ மனசுல நினைச்சுகிட்டாங்க போல" என தவறாக புரிந்து கொள்ளும் அபாயம் உண்டு. நடிகர்களின் வாயையே பார்க்க வேண்டியது அவசியம். அனுஷாவிற்கு கூட கௌதம் மேனோனே டப்பிங் கொடுத்துட்டரோ என்ற சந்தேகம் எனக்கு மட்டும் தானா? எல்லோருமே அவரைப் போல பல்லைக் கடித்துக் கொண்டு வாயின் கொஞ்ச இடைவெளியில் தான் பேசுகிறார்கள். படம் முழுதும் ஏதோ ஒரு பாத்திரம் மாறி மாறி தன் குரலில் கதையை நர்ரேட் செய்துக்கொண்டே இருக்கிறது. படம் முடிந்ததும் வேறு வழியில்லாததால் கௌதமே நர்ரேட் செய்து "இப்போது படம் முடிந்தது" என்கிறார்.

கொடுத்த காசுக்கு துவம்சம் செய்திருப்பது ஹாரிஸ் மட்டுமே. தனித்தனியாக ஒவ்வொருத்தர் காதுக்குள்ளும் வந்து வாசி வாசியென்று ....சிக்கிறார். அடிக்கும் அடியில் அசந்து தூங்கிக்கொண்டிருந்தவர்கலெல்லாம் "என்னை எழுப்பினால்" என எழுந்து கிளம்பிக்கொண்டிருந்தார்கள்.