Sunday, February 28, 2021

தன்னிரங்கல் - ஆஷாபூர்ண தேவி

 வங்காள சிறுகதை:




அபினாஷ் தூங்கிக்கொண்டிருக்கும்போது நள்ளிரவில் திடீரென மோசமானதொரு அசெளகரியத்தை உணர்ந்தார். 

அவர் விழித்துக்கொண்டார். தன் கை கால்கள் வியர்வையில் நனைந்திருப்பதை உணர்ந்தார், அவர் கழுத்தின் கீழிருந்த தலையணை ஈரத்தில் தோய்ந்திருந்தது. எழுந்து உட்கார முயன்றார், அவரால் முடியவில்லை. தலையைத் தூக்கித் தலையணையைத் திருப்பி போடுவது நல்லது என்று நினைத்தார் ஆனால் தன்னால் அதை தற்போது செய்ய இயலாது என்பதை உணர்ந்துகொண்டார். அவரால் கைகளையோ கால்களையோ அசைக்க முடியவில்லை, அவை கல்லைப்போல மரத்துப் போயிருந்தன. 

கிட்டத்தட்ட அறுபதை நெருங்கிவிட்ட நிலையில், தன் வாழ்க்கையில் அத்தனையையும் பார்த்துவிட்டார்— இந்த உணர்தல் அவர் மூளையின் ஒவ்வொரு நரம்பிலும், ஒவ்வொரு அணுவிலும், ஒவ்வொரு திசுவிலும் கூர்முனை வாள் ஒன்றை நுழைத்ததைப்போல ஒரு கேள்வியைச் சொருகியது.

எனக்குப் பக்கவாதம் வந்துவிட்டதா? என் நெஞ்சில் மூச்சை நிறுத்தும் இந்த வலி? இந்த வியர்வை, கைகளிலும் கால்களிலும் இந்த உணர்வின்மை – இது எல்லாமே பக்கவாதத்திற்கான அறிகுறிகள்தான்!

சமநிலையிழந்து, பயத்தில் அபினாஷ் யாருடைய பெயரையோ கூவி அழைக்க முயன்றார் – அது அவருடைய மூத்த மகனின் பெயராகவோ அல்லது இளைய மகனின் பெயராகவோ, அவரது பேத்திகளில் ஒருவராகவோ, அல்லது ஷைலோபாலாவாகக்கூட இருக்கலாம்! இல்லை, அது ஷைலோபாலாவாக இருக்க முடியாது, அவர் ஷைலோபாலாவை பெயர் சொல்லி எப்போதாவது அழைத்திருக்கிறாரா என்ன, அவரது உதடுகளிலிருந்து அப்பெயர் எப்படி வெளிவரும்? இத்தனை நாள் பழக்கத்தில் இல்லாத ஒன்றை, இது இறுதி மணித்துளி என்றாலும்கூட செய்துவிடமுடியாது. அதனால்தான் மாமுனிகள் நாமங்களை எப்போதும் உச்சரித்துத் தொடர்ந்து ஒத்திகை செய்யவேண்டும் என்கிறார்கள்.

அபினாஷ் அதைப் பயிற்சி செய்தவரில்லை, அதனால் தனக்குப் பழக்கமான ஒரு கூப்பாட்டை எழுப்பினார். அவர் யாரை வேண்டுமானாலும் அழைத்திருக்கலாம், ஆனால் அது யாருடைய காதுகளையும் சென்று சேரவில்லை: அவரது கூச்சல் உள்ளுக்குள்ளேயே இடித்து மோதிச் சுருண்டது; அவரது தொண்டையிலிருந்து ஒரு சப்தமும் வெளிவரவில்லை.

அபினாஷை முடக்குவாதம் தாக்கிவிட்டது என்று இதற்கு அர்த்தம். அவர் சற்றும் எதிர்பார்த்திராதபோது ஒரு திடீர் தாக்குதல். படுக்கையில் படுக்கும்வரை, அவ்வளவு ஏன்… தூக்கத்தில் வீழ்ந்த அந்தக் கணம் வரை கூட ஆரோக்கியமாகவும், இயல்பாகவும், நிதானமாகவும் இருந்த அபினாஷை இது எப்படியோ பிடித்துக்கொண்டது. 

பகலில் அவரது அன்றாட வழக்கங்களை எந்த மாற்றமுமின்றிதான் பின்பற்றினார். உடலில் எவ்விதமான வித்தியாசத்தையும் அவர் உணரவில்லை. அதிகாலையில் எழுந்து பூங்காவில் ஒரு நடை சென்றார். வீட்டிற்குத் திரும்பி வரும் வழியில், எப்போதும்போல், பால் மையத்திற்குச் சென்று பால்காரனுக்கு அவனுடைய கடமைகளை நினைவுபடுத்தித் தன் கண் முன்னாலேயே அவனை பசுவிலிருந்து பால் கறக்கச்செய்து இளைய பேரனுக்காகப் பால் வாங்கிக்கொண்டு வந்தார். 

அப்பேரனின் பெற்றோர்களான அபினாஷின் இளைய மகனும் அவன் மனைவியும் இதைச் செய்யுமாறு அவரிடம் கேட்கவில்லைதான். அவர்கள் பாக்கெட் பாலைத்தான் பயன்படுத்துகிறார்கள். அபினாஷ் அவராகவேதான் இந்தப் பொறுப்பை எடுத்துக்கொண்டார். அலுமினியப் பாத்திரத்தைக்கூட அவர் நடை செல்லும்போதே எடுத்துச் சென்றுவிடுவார். அதைப் பார்த்துச் சிரிப்பவர்களைத் தான் கண்டுகொள்வதில்லை என்று பெருமையாகத் தன் பேத்திகளிடம் சொல்வார். 

அது போகட்டும், இன்றும்கூட வீட்டிற்குத் திரும்பி வந்ததும் தேநீரோடு சிற்றுண்டி சாப்பிட்டார், செய்தித்தாளை வாசித்து முடித்ததும் பெரிய கோப்பையில் இரண்டாவது தேநீரோடு கொஞ்சம் மசாலா தடவிய உருளைக்கிழங்குகளையும் அல்வாவையும் சாப்பிட்டார். தனது வயதான காலத்தில் காலை வேளைகளில் அவர் அதிக பசியுடன் இருப்பதைப் போலத் தெரிகிறது, ஆனால் அவர் எதையும் வெளிப்படையாகக் கேட்பதற்கு வெட்கப்பட்டார். சில சமயங்களில் நந்திதாவின் காலையுணவிற்கென்று தயாராகிக் கொண்டிருப்பதை வாசனையை வைத்தே சட்டெனக் கண்டுபிடித்துவிடுவார். 

அபினாஷ் வழக்கமாக ரொட்டியையும் உருளைக்கிழங்கு கறியையும் தன் காலையுணவாக எடுத்துக்கொள்வார்; அவருடைய மகன்கள் பூரியும் இனிப்பும் உண்பார்கள்; அவருடைய பேத்திகளால் பெரிய பூரியை வேகமாகச் சாப்பிட முடியாது, அதனால் அவர்களுக்கு விழுங்குவதற்குச் சுலபமானவை எதையாவது கொடுக்க வேண்டியிருக்கும். முட்டை வறுவல், நிம்கி, அல்வா, மசாலா உருளைக்கிழங்குகள் போன்றவை…

சில சமயங்களில் இந்த சமையல் நறுமணங்கள் சமையலறையிலிருந்து காற்றுவழி மிதந்து வந்து அபினாஷைத் தொந்தரவு செய்யும். அதன் பிறகு கையில் செய்தித்தாளை வைத்துக் கொண்டே உள் அறைகளை நோக்கி நடந்து செல்வார் — ‘இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டியா? மோடிஹாரி அருகே பேருந்து விபத்தில் கல்யாண கும்பல் ஒன்று இறந்துபோய்ட்டாங்களாம்!’… அல்லது, குரலை உயர்த்திச் சொல்வார், ‘என்ன ஆச்சுனு கேள்விப்பட்டியா? நேற்று ஒரு மிகப் பெரிய நெருப்பு –‘

நிச்சயமாக இப்படிச் செய்திகளை இவர் அள்ளி வழங்குவது ஷைலோபாலா என்ற இலக்கை நோக்கித்தான். அவரால் செய்தித்தாளில் வரும் அரசியல் மற்றும் அதன் சூழ்ச்சிகள் போன்ற உண்மையான செய்திகளைப் பற்றியெல்லாம் அவளிடம் பேசமுடியாது, நாட்டின் பிரச்சினைகளையெல்லாம் தலைவலிகளாகத் தூக்கிச் சுமக்க அவளுக்கு நேரம் கிடையாது. விலைவாசி உயர்ந்தால் அரசு அதிகாரிகளைக் கோபத்தாலேயே எரித்துவிடுவாள், ஓரளவு குறைந்தாலும் மகிழ்ந்துவிடுவாள். அவள் எதையாவது உற்றுக் கவனிப்பாள் என்றால் அது இதுபோன்ற விபத்துகள் பேரழிவுகள் பற்றிய செய்திகளைத்தான்… எனவே செய்ய வேண்டியது என்ன, இந்தத் தலைப்புகள் மட்டுமே விவாதிக்கப்படவேண்டும். ஆனால் சிலநேரங்களில் ஷைலோபாலா ஏதாவது அவசரத்தில் இருக்கும்போது இப்படிச் சொல்லிவிடுவாள், ‘இதைப் பற்றியெல்லாம் எங்கிட்ட சொல்லாதீங்க, விட்டுடுங்க… எனக்கு வருத்தமாகிடும், அதுவும் இவ்வளவு விடிகாலையில…’

‘வருந்துவேன்’ என்று சொல்வதெல்லாம் வெறும் சாக்குதான் என்பதை அபினாஷ் புரிந்து கொண்டிருக்கிறார்; அவள் வேலையாக இருக்கும்போது இந்தச் செய்திகளைக் கேட்பதற்குக் கூட அவளுக்கு நேரம் கிடையாது. பிறகு சொல்வார், “வெறும் உயிரோடு இருப்பதே தனித்துவமான விஷயம் என்பது போலாகிவிட்டது ஜனங்களுக்கு என்று இதனாலதான் நான் அடிக்கடி சொல்றேன்.” சொல்லிவிட்டு ஒரு நிமிடம் அங்கிங்கென உலாத்திவிட்டு மீண்டும் அருகில் வந்து கேட்பார், “அதென்ன, நல்ல வாசமா இருக்குதே! அல்வா கிண்டுறியா? … உருளைக்கிழங்குகளை வறுக்கிறாயா? முட்டை வறுவல் செய்யுறதைப் போல வாசம் வருதே. எதுல நீ இதையெல்லாம் வறுக்கிறாய்? நெய்யிலா இல்லை கடுகெண்ணெய்யிலா? நல்ல மணமா இருக்கு.”

அவரின் இந்தச் சாடைக் குறிப்புகளினாலோ அல்லது ஷைலோபாலாவின் சலுகையாகவோ அபினாஷ் தன்னுடைய இரண்டாவது தேநீர் கோப்பையோடு இரண்டாவது காலையுணவையும் பெற்றுவிடுவார். இன்றும்கூட அவர் அதை மிகுந்த மகிழ்வுடன்தான் அனுபவித்து உண்டார்.

அபினாஷ் தன்னுடைய மனதில் இன்றைய காட்சிகளை ஓடவிட்டுப் பார்த்தார்; எங்கேயாவது பலவீனத்தின் அடையாளம் உடலில் தென்பட்டதா என்பதைக் கண்டுபிடிக்க விரும்பினார். ஆனால் அப்படி எதையும் அவரால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. 

இன்று காலையுணவிற்குப் பிறகு அவர் வழக்கம்போல சந்தைக்குச் சென்றார். அதுவும்கூட தினசரி செய்வதுதான்: அவரது மூத்த மகன் காலையில் வேலைக்காரனுடன் கடைத்தெருவிற்குப் போய்ப் பொருட்களை வாங்கி வருவான். அப்படியிருந்தும், ஏதோ அப்பணியை முழுமையாக முடித்துவைப்பதுபோல், மகன்கள் வேலைக்குக் கிளம்பியபிறகு அபினாஷ் சந்தைக்கு மீண்டுமொருமுறை சென்று வருவார். சாப்பிட முடியாதவை, யாரும் தொடக்கூட விரும்பாத சிலவற்றை வாங்கிவந்து அதைப் பெருமையாகக் காட்டுவார்… வாழைத்தண்டுகள், சிறிய கீரைகள், முளைவிட்ட வள்ளிக்கிழங்குகள், துண்டு மீன்கள் – – இதையெல்லாம் யாருமே சாப்பிடுவது கிடையாது. யாரும் சாப்பிடுவது இல்லையென்றால் பிறகு ஏன் இவையெல்லாம் சந்தையில் விற்கப்படுகிறது? எது எப்படியோ, யாரும் சாப்பிடவில்லையென்றால் அபினாஷே அத்தனையையும் சாப்பிட்டுவிடுவார். இதையெல்லாம் உண்பதால் வயிற்றில் அமிலத்தன்மை உண்டாகிறதென ஷைலோபாலாகூட சொல்லத் தொடங்கிவிட்டாள். அதெல்லாம் சுத்த முட்டாள்தனம்; அவள் தன் மகன்களிடமும் மருமகள்களிடம் நல்ல பெயர் வாங்க, அவர்களின் நவீனப் போக்கோடு தன்னை இணைத்துக்கொள்கிறாள், அவ்வளவுதான். அபினாஷ் அவர்களோடு ஒத்துப்போவதில் ஆர்வம் காட்டுவதில்லை. உண்மையில், இதைப் பதிய வைக்கும் விதமாக இன்று காலை தன் மருமகள்கள் முன்னால் அநாகரிகம் என்று அவர்களால் கருதப்படும் சோர்சோரியை தட்டு நிறைய வைத்து உண்டார்.

அதன்பிறகு அன்று மாலை பிஸ்கட்டுகளுடன் தேநீர் அருந்தினார்; தன் இளைய பேத்தியைப் பள்ளிக்கூடத்திலிருந்து திரும்ப அழைத்து வரும் கடமையை ஆற்றினார்; தன் இளைய பேரனுடன் பூங்காவிற்குச் சென்றார். தினசரி வேலைக்காரி நடை வண்டியில் அவனை வைத்து தள்ளிக்கொண்டு பூங்காவிற்குப் போகும்போது அபினாஷும் உடன் செல்வார். வேலைக்காரியின் கைகளில் இப்பொறுப்பை விடுவதை அவர் ஒப்புக்கொள்வதில்லை. “எத்தனையோ குழந்தைகள் அடுத்தவர்களோடு பூங்காவுக்கு போறாங்க, ஆனால் யாரோட தாத்தாவும் பாதுகாப்புக்குக் கூடவே போறதில்லையே?” என்று அவர் மருமகள் சிரிப்பைப் பொத்திக்கொண்டு கூறுவாள்.

அவள் என்ன சொன்னாலும் அபினாஷ் எப்படியும் செல்வார், அவர் இன்றும் சென்றார். அதற்குப் பிறகு? அதற்குப் பிறகு வேறென்ன, அவருடைய மகன்கள் ஒருவர் பின் ஒருவராக வீட்டிற்குத் திரும்பினர், அவர்களுக்கு தேநீர் தயாரானது, வழக்கம் போல அவர்களுடன் அவரும் கொஞ்சம் சாப்பிட்டார். சிறிது நேரம் அது இதுவென்று பேசிக்கொண்டிருந்துவிட்டு இரவுணவை முடித்துவிட்டுப் போய்ப் படுத்துக்கொண்டார். இத்தனைக்குமிடையே அபினாஷ் சென் என்று அழைக்கப்படும் அந்த மனிதன் ஆழமான புதைகுழியில் காலை வைத்துவிட்டு அதில் தற்போது மூழ்கிக்கொண்டிருப்பதற்கான அறிகுறிகள் எப்போதாவது தென்பட்டதா?

அபினாஷ் சத்தம் போட மீண்டும் முயன்றார், ஆனால் தொண்டையிலிருந்து எந்தக் குரலையும் அவரால் மேலே உயர்த்த முடியவில்லை. முடக்குவாதம் அவர் முழு உடலையும் ஆட்கொண்டுவிட்டது என்பதுதான் அதற்கு அர்த்தம். ஆனால் அந்த அரக்கன் அவருடைய நாக்கை கூட விட்டுவைக்கவில்லை. 

‘பக்‌ஷாகாட்’, முடக்குவாதம்! இந்த நோய்க்கான பொதுப் பெயரை நினைவிற்குக் கொண்டு வராமல் ஆயுர்வேத மருத்துவத்தின் பக்கங்களிலிருந்து அதிகம் புழக்கத்தில் இல்லாத ஒரு வார்த்தையைக் கையில் எடுத்துக் கொண்டார். “பக்கவாதம்” என்ற வார்த்தையை விட இது அச்சமூட்டுவதாக இருக்கிறது. மிகக் கடுமையான தொனியில் இது ஒலிக்கிறது என்பதானால் இருக்கலாம். ஒருவரது துக்கத்தை எடை போடுவதற்கு அதுவும் அவசியமானதுதான். 

இது கோடைக்காலம்தான் என்றாலும் மாலையில் வீசிய பலமான வடமேற்கு இளங்காற்றுக்குப் பிறகு குளிரத்தொடங்கி விட்டது, அபினாஷிற்கு சட்டென ஜலதோஷம் பிடித்துக்கொள்ளும் என்பதால் தன் தலைக்கு மேல் இருந்த ஜன்னல்களை அடைத்து வைத்திருந்தார். அவருக்கு முன்னால் மேஜையின் மீதிருந்த மின்விசிறி சத்தமின்றி நிதானமாகச் சுற்றிக்கொண்டிருந்தது. மிகக் குறுகலான அறை அது, உண்மையில் அதைப் படுக்கையறை என்றே கணக்கில் கொள்ள முடியாது. அதனால் கூறையில் மின் விசிறி பொருத்தப்படவில்லை. அதற்கு அவசியமுமில்லை, மற்ற ஜன்னல்களையும் திறந்து வைத்திருந்தால் ஆளையே தூக்கிக் கொண்டு போகுமளவிற்குப் பலமான காற்று வீசும்; இன்று அந்த ஜன்னலின் ஒரு பக்கம் மூடப்பட்டிருந்தது. 

ஷைலோபாலா படுக்கைக்குச் செல்லும் முன்னால் இதையெல்லாம் கவனித்துக் கொள்வாள். அவள் வெகுதொலைவு சென்றுவிடப் போவதில்லைதான், உடல் நீட்டி அவள் படுக்குமிடம் அடுத்த அறையிலேயேதான் இருக்கிறது. இந்த அறையோ மிகச்சிறியது, அடுத்த அறைக்கும் இதற்குமிடையே ஆன தூரமும் மிகக் குறைவே. இவ்விரண்டு அறைகளுக்கான கதவுகளும் எப்போதும் திறந்தேதான் இருக்கும். வாசற்படியில் ஒரு திரைச்சீலை மட்டுமே தொங்கிக் கொண்டிருக்கும்… இருப்பினும், இந்த இடைப்பட்ட தூரம்தான் அளவிடமுடியாது எவ்வளவு நீண்டிருந்தது.

அபினாஷின் மூத்த மகனின் மகள்கள் வளர்ந்தபிறகு அவர் தனது நீண்ட நாள் பழக்கமான, அவரது தனக்கே தனக்கான பொக்கிஷம் ஒன்றை இழந்துவிட்டார்: ஷைலோபாலாவின் அருகாமை. மிக அற்பக் காரணத்திற்காக அவர் அதை இழக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது: அப்பெண்களின் பெற்றோருக்கு இவ்வீட்டிலுள்ள பங்கென்பது ஒரேயொரு அறைதான். வளர்ந்த இரண்டு சிறுமிகளுடன் ஒரே அறையில் தூங்குவது அவ்வளவு உகந்ததல்ல, எனவே நடைமுறைக்குத் தக்க ஒழுங்கு முறைகளைக் காப்பாற்றும் பொருட்டு ஷைலோபாலாவே இத்தகைய ஏற்பாட்டைச் செய்தார்.

இந்தத் தொன்மையான வீட்டில், தன் திருமண வாழ்வின் முதல் இரவில் மலர்கள் தூவிய படுக்கை விரிக்கப்பட்டிருந்த, இதுவரையிலும் தன் எல்லா நாட்களையும் கழித்த அந்த அறையிலிருந்து அபினாஷ் பெயர்த்து வெளியேற்றப்பட்டார். அவர்களின் திருமணத்தன்று அவர்களுக்குக் கிடைத்த மிகப் பழமையான ஜோடி கட்டிலில் தற்போது ஷைலோபாலா தனது இரண்டு பேத்திகளோடு மிகுந்த மகிழ்ச்சியோடு தூங்க, அபினாஷோ இந்தக் குறுகிய அறையில் குறுகிய கட்டிலில் கிடக்கிறார்.

இந்த ஏற்பாடு முதன்முதலில் விவாதிக்கப்பட்டபோது, அபினாஷின் தலையில் பெரிய இடியொன்று விழுந்தது, ஆனால் ஷைலோபாலா முன்னரே எச்சரிக்கை செய்திருந்தாள்: “நல்லா கவனமா கேளுங்க, இதுக்கு எதிரா ஒரு வார்த்தை கூட சொல்லிடாதீங்க. அப்புறம் கடைசி வரைக்கும் இது தாளமுடியாத அவமானமாகிடும்.” அதனால் அபினாஷ் தனது உதடுகளை சாவியிட்டு பூட்டிவிட்டார். தன்னுடைய துக்கம், கோபம், தற்பெருமை, பேரவமானம் அத்தனையையும் அவரது மனதின் ஓரத்தில் ஒதுக்கிப் பதுக்கப்பட்டுவிட்டது.

 அவருடைய மூத்த மகன், “ஒரு வகையில உண்மையிலேயே இந்த அறை சிறப்பானதுதான் என்று நினைக்கிறேன். தெற்கு பக்கமா ஒரு பெரிய ஜன்னால் இருக்கு, மத்த அறையில் இதுபோல இல்லையே” என்று சொன்னபோது, அபினாஷ் செய்தித்தாளை உயரே தூக்கி தன் முகத்திற்கு நேரே பிடித்துக்கொண்டார். 

“அந்த அறை எப்பவுமே குப்பைக்கூளமாக இருந்ததால அது எவ்வளவு அழகானது என்பது தெரியாமலே போயிடுச்சு. கிழக்கிலும் தெற்கிலும் இருக்கும் ஜன்னல்களைத் திறந்து வெச்சா, வீசும் மென்காற்று உங்களை அப்படியே தூக்கிடும் இல்லையா அப்பா,” என்று தன் மருமகள் சுட்டிக்காட்டியபோது, அபினாஷ் சொன்னார் – “மருமகளே, உன் சலவைக்காரன் எப்போ வருவான்?”

நிச்சயமாக ஷைலோபாலா இதையெல்லாம் புரிந்துகொள்வாள், அபினாஷின் வெளியேறும் மூச்சில் சிறு மாற்றம் இருந்தாலும் அதை ஷைலோபாலா தன் ஒவ்வொரு எலும்பினூடாகவும் உணர்வாள். ஆனால் தான் புரிந்துகொண்டதாக அவள் காட்டிக்கொள்வதில்லை. இதையெல்லாம் காணும் ஞானம் தனக்கில்லை என்பதைப் போல பாசங்கு செய்யப் பழகிக்கொண்டாள். இருப்பினும், தற்போது அபினாஷ் தன்னுடைய கடைசிக் கடுந்துயரக் குரலை எழுப்பி அவர்களது காதுகளை எட்ட முயற்சித்தார். அவர் சொல்வதையெல்லாம் அக்கறையோடு கவனிக்க வேண்டும் என்பது அவசியமில்லை என்று நினைப்பவர்களின் காதுகள் அவை.

ஆனால் அது அவர்களை எட்டவில்லை. அவரது உச்சபட்ச முயற்சியும் கூட பலனற்றுப் போனது; அவருக்கு வியர்வை திரண்டது. துக்கத்திலும் வலியிலும் அவர் சத்தம் போட்டுக் கத்த முயன்றார். ஆனால் அவரது தொண்டையிலிருந்து ஒரு முனகல் சத்தம் மட்டுமே வெளிப்பட்டது, ஏதோவொரு காட்டு விலங்கின் அழுகுரலினைப் போல. 

தற்போது அபினாஷிற்கு அவரது மூத்த பேத்தியின் குரல் கேட்டது, “பாட்டி…ஓ பாட்டி… தாத்தா வித்தியாசமா ஏதோ சத்தம் போடுறார்.”

அப்படியானால்,ஷைலோபாலா இன்னமும் ஆனந்தமான ஆழ்துயிலில் தன்னை இழந்துவிட்டிருக்கிறாள், அவரின் குரல் உறக்கத்தின் ஆழத்தில் இருக்கும் அவளைப் போய்த் தொடவில்லை… ஒஹ், அபினாஷ் இங்கே சில அடி தூரத்தில் மரண வேதனையில் துடித்துக் கொண்டிருக்கிறான்,  ஆனால் ஷைலோபாலாவோ… 

அதன் பிறகு அவரது மார்பில் ஏதோவொன்று உருண்டு திரண்டது… நல்லதுதான், ஷைலோபாலாவும் அவள் மகன்களும் தங்களின் நிம்மதியான உறக்கத்திலிருந்து விழித்ததும் இந்த அபினாஷின் செத்துப்போன முகத்தைக் காணட்டும். தன் மனைவி மகன்களின் மீது அவர் இப்படியொரு சாபத்தை மனதில் உருவாக்கிய அதே நேரத்தில் அவர் கண்களிலிருந்து கண்ணீர் பொங்கி வழிந்தோடியது.

ஆனால் அபினாஷின் சாபம் பலிக்கவில்லை. அடுத்த கணமே ஷைலோபாலவின் சற்றுமுன் விழிப்புற்ற குரல் கேட்டது – – “ஓஹ்… மா… இது என்னது!”

அதன் பிறகு திரை விலகியது, அதன் அருகில் ஷைலோபாலாவின் தலைவிரி கோலமான தோற்றம் தென்பட்டது. 

அபினாஷ் கண்களை மூடிக்கொண்டார். கண்ணீர் மல்கிய தன் கண்களை ஷைலோபாலாவிடம் காட்டுவதற்கு அவருக்கு விருப்பமில்லை. அபினாஷ் கண்களை மூடிக் கொண்டிருந்தாலும், அவருடைய இரண்டு பேத்திகளும் அறைக்குள் வந்திருப்பதையும், அவர்களில் இளையவள் உரத்த குரலில் — “பாபி பாபி, காகு காகு” என்று சத்தமிட்டபடி ஓடுவதையும் அவரால் உணரமுடிந்தது. 

ஷைலோபாலா அவரின் குறுகலான கட்டிலின் ஒரு ஓரத்தில் அமர்ந்து அவரது வலதுகை மணிக்கட்டைத் தாங்கி அதில் நாடித்துடிப்பைப் பரிசோதிப்பதை அவர் உணர்ந்தார். அவள் ஒரு ஆயுர்வேத மருத்துவரின் மகள், உடல் ஆரோக்கியம் குறித்த விஷயங்களில் தீர்க்கமான, உள்ளார்ந்த புலனுணர்வு கொண்டவள்; அந்த அறிவை உடனடியாக பயன்படுத்தக் கூடியவள். யாருக்காவது உடல் நலமின்றி போகும்போதெல்லாம் ஷைலோபாலா செய்யும் முதல் விஷயம் அவர்களின் நாடித்துடிப்பைத் தொட்டுப் பார்ப்பதுதான். 

ஷைலோபாலா அவரது கையை மெல்லத் தாழ்த்தி கவனமாகப் படுக்கையின் மீது வைத்ததையும், இப்போது அவரை நெட்டித் தள்ளி “உங்களுக்கு கேட்குதா” என்று சத்தமாக அழைப்பதையும் அவர் உணர்ந்தார். “ஓ… உங்களுக்கு கேட்குதா இல்லையா? என்ன பண்ணுது உங்களுக்கு? எங்க வலிக்குது? ஏதாவது கெட்ட கனவு கண்டீங்களா?”

அபினாஷ் நினைத்தால் அவரால் தன் கண்களைத் திறக்க முடியும், கண் இமைகள் முடங்கிப் போய்விடவில்லை. ஆனால் அவருக்கு அதில் விருப்பமில்லை. வேதனை மிக்க இக்குரலை அவர் அனுபவிக்கத் தொடங்கிவிட்டார். “உங்களுக்கு கேட்குதா? அய்யோ என்ன வலி என்று சொல்லுங்க?” … அதோடு ஷைலோபாலாவின் அன்பான தொடுதலும் கூட. ஆனால் கனவினைப் போன்ற இந்த இன்பம் நெடுநேரம் நீடிக்கவில்லை, அவரது இரண்டு மகன்களும் அறைக்குள் நுழைந்தனர். அபினாஷ் தனது கண்களை மூடியிருந்தபோதிலும் ஒருவன் சில்க் லுங்கியிலும் மற்றொருவன் கோடுபோட்ட பைஜாமாவிலும் இருப்பதை பார்க்க முடிந்தது. அடியெடுத்து வைத்து அப்பாவின் படுக்கையை நெருங்கி வந்து குனிந்து முகத்தைக் கீழே இறக்கி சத்தம் போட்டு அவரை அழைத்தனர், “அப்பா… அப்பா…” பிறகு குரலைத் தாழ்த்தி கேட்டனர், “என்ன ஆச்சு?”

 ஷைலோபாலவின் பதில் அவருக்குக் கேட்டது, “தெரியல. ரிங்க்கு என்னை எழுப்பி தாத்தா ஏதோ வித்தியாசமா சத்தம் போடுறார்னு சொன்னா. நான் வந்து அவரை கூப்பிட்டுப் பார்த்தேன், அவர் பதிலெதுவும் சொல்லலை.”

ஆனால் ஏன் அவளது குரல் இப்படி மாறிவிட்டது. ஏன் அவளது குரலில் துக்கம் பீறிட்டு வெடிக்கவில்லை? ஒரு கணத்திற்கு முன்னால் இருந்த வருத்தம் கூட இப்போது போய்விட்டது, அவள் மிகவும் நிதானமடைந்துவிட்டதைப் போலத் தெரிகிறது. அதன் அர்த்தம் அவள் தன் மகன்களுக்கு முன்னால் அழுதுவடியக்கூடாது என்பதே. அதாவது தன் கணவனுக்காகக் கவலைப்படுவதென்பது ஷைலோபாலாவைப் பொறுத்தவரையில் ஒரு தாழ்வான செயல். ஆமாம், சரிதான், அபினாஷ் முன்பொருமுறை கூட இதை கவனித்திருக்கிறார். 

மூத்த மகன் மீண்டும் அழைத்தான்: அபினாஷ் அசையவில்லை. மகன்கள் மருத்துவரை அழைப்பதைப் பற்றிய உரையாடலைத் தொடக்கினார்கள். 

கண்களின் மீதிருக்கும் இந்த இரண்டு சிறிய இலைகள் இப்படியொரு பாதுகாக்கும் சல்லடைத் திரையாக இருக்குமென்றும் அதன் மறைவில் ஒருவர் இந்தளவு பதுங்கிக்கொள்ளமுடியும் என்பதும் யாருக்குத் தெரியும்.

பெருத்த வருத்தத்துடன் அபினாஷ் தன்னுடைய நெஞ்சில் ஏற்பட்ட கடுமையான வலி தற்போது குறைந்துவிட்டது என்பதை உணர்ந்துகொண்டார், தன்னால் இப்போது பேசமுடியும் என்று தோன்றியது அவருக்கு. “தயவுசெய்து வேண்டாம்பா …இந்த நடுவிரவில் டாக்டர்-கீக்டர் என யாரையும் அழைக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் அப்பா இப்போது இறக்கப்போவதில்லை” என்று கூறி ஒற்றை மூச்சில் அவர்கள் கவலை அத்தனையையும் அவரால் ஊதித் தள்ளிவிடமுடியும். 

அவரது நிலைமை சற்று முன்னேறிவிட்டது, அவரால் இப்போது பேச முடியும் என்றும் நினைத்தார். ஆனால் அபினாஷ் பேச முயற்சிக்கவில்லை, பற்களை ஒன்றாக இறுக்கி ஒட்டி, கண்களை அடைத்து அசையாமல் அப்படியே படுத்திருந்தார். 

அது ஒரு திகிலூட்டும் முன்னுணர்தல்தான், ஆனால் அவருக்கு உறுதியாகத் தெரியும் – அவர் இப்போது வாய்திறந்து பேசினால் அவர்களின் முன்னால் மிகவும் தாழ்வுற்றவராக மாறி இளக்காரமானவராகத் தெரிவார். இல்லை, அவருடைய மதிப்பு இப்போது சட்டெனக் குறைந்துபோவதில் அவருக்கு விருப்பம் இல்லை. அதற்குப் பதிலாக அவர் அப்படியே கண்களை மூடிப் படுத்துக் கிடக்க, மருத்துவர் வந்து பரிசோதனைகள் செய்து, அவரை பெயர் சொல்லி அழைத்துப் பார்த்தும் பதிலெதுவும் வராததால் தன்னுடைய அனுமானங்களைச் சைகைகளாலும் அசைவுகளாலும் மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துவார். ‘இது மூளையில் ஏற்பட்டிருக்கும் இரத்தக்கசிவாக இருக்கலாம்.’ அவர் உத்தரவு கொடுப்பார்: ‘அவரை படுக்கையிலேயே வைத்திருங்கள். முழுமையான ஓய்வு வேண்டும்.’ 

அதன் பிறகு என்ன? அவரது மகன்களால் இனி தன் அப்பாவின் மேல் அக்கறையில்லாமல் இருக்க முடியாது. ஷைலோபாலா? இது ஷைலோபாலாவிற்கு ஒரு பொருத்தமான தண்டனையாக இருக்கும். பேத்திகளுடன் அவளுடைய படுக்கையில் படுத்து நிம்மதியாக உறங்குவதற்கு முன்னர், ஏனோதானோவென அக்கறை இருப்பதாகக் காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக, ஒரு கடமையாக, வெறும் உதட்டுச் சேவையாக, மின்விசிறியை இயக்கவோ அல்லது ஜன்னலை மூடவோ, ஒருமுறையோ இருமுறையோ மட்டும் இவருடைய அறைக்குள் வந்து போவது இனி நடக்காது. அவளது ஆற்றல் அத்தனையும் அவளது வாழ்விற்காகவென மட்டுமே செலுத்துவதும் இனி தொடராது. 

அவரது சல்லடைத் திரைக்குப் பின்னால் பதுங்கிக்கொண்டு அபினாஷ் மருத்துவருக்காகக் காத்திருக்கத் தொடங்கினார். ஆனால் அவரது காத்திருப்பு வெற்றிகரமானதாக அமையவில்லை. தான் சொல்லியிருக்க வேண்டிய வார்த்தைகளை அப்படியே ஷைலோபாலாவின் குரல்களில் கேட்டார் அபினாஷ், “இருக்கட்டும் விடு, கோக்கா. டாக்டரைத் தேடி இப்பவே அவசரமா போக வேண்டிய அவசியமில்லை.”

இளைய மகன் சொன்னான், “டாக்டரிடம் காட்டாமல் இருப்பது சரியா இருக்குமா?”

“ஆமாம். அவர் ஏதோ ஒரு கெட்ட கனவை கண்டிருப்பார்னுதான் நினைக்கிறேன். அதைப் பற்றிப் பேச அவருக்கு விருப்பமில்லை அவ்வளவுதான் – வேறெதுவும் இல்லை. அவரோட நாடித்துடிப்பும் நல்லாத்தான் இருக்கு.” அவள் ஒரு மருத்துவர் வீட்டுப் பெண், அதைப்பற்றிய பெருமையை வெளிப்படுத்துவதற்குக் கிடைக்கும் எந்த வாய்ப்பையும் அவள் தவிர்ப்பதில்லை. ஓ… என்னவொரு வெட்கமில்லா கொடூரம். தன் மகன்களின் மீதான தன்னுடைய செல்வாக்கைத் தக்க வைத்துக் கொள்வதற்காக இப்படியொரு இரக்கமற்றதனமா?

அவருடைய கை கால்கள் ஆத்திரத்தில் பற்றியெரிந்தன, வார்த்தைகள் கொத்தாக அவர் மனதில் மேலெழுந்தது, ‘உன்னுடைய பெருத்த ஆணவத்தை நான் காண்கிறேன்! திடீரென அனைத்தும் அறிந்தவள் ஆகிவிட்டாய்! நாடித்துடிப்பு நன்றாகத்தான் இருக்கிறது! அதை நன்றாகவே இருக்கச் சொல்லிக் கேட்டவன் எவன்?’ அவரது தாறுமாறான நாடித் துடிப்பிற்கேற்ப அவரது கண்கள் மீண்டும் நிறைந்தன. உப்பு நீரினால் உறைக்கத் தொடங்கின, ஆனாலும் அவர் அவற்றைத் திறக்கவில்லை. 

ஷைலோபாலாவின் கவலையற்ற குரல் மீண்டும் கேட்டது, “மின்விசிறியைப் போடு ரிங்கு. ஜன்னலை முழுசா திறந்து வை… பாருங்க, நான் பேசுறது கேட்குதா- – தண்ணீ கொஞ்சம் குடிக்கிறீங்களா?”

தண்ணீர்! அவ்வார்த்தையின் ஒலி அவருக்குள் ஆர்வத்தைத் தூண்டியது, சோர்ந்திருக்கும் அவரது ஒவ்வொரு நரம்பின் எதிர்பார்ப்பு அது. இத் தருணத்தில் அவருக்கு உண்மையிலேயே தேவையானது தண்ணீர்தான் என்பதை உணர்ந்துகொண்டார். இனியும் கண்களை மூடிக்கொண்டிருப்பது உதவாது. எந்த பதிலும் இல்லையென்றால் அவர்கள் தண்ணீர் கொண்டுவர மாட்டார்கள் – – ‘அவரை விடு. தொந்தரவு செய்ய வேண்டாம். அவர் விழித்ததும் தண்ணீர் குடிக்கட்டும்.’ அபினாஷ் கண்களைத் திறந்தார். 

மூத்த மகன் கேட்டான், “அப்பா, தண்ணீ கொஞ்சம் குடிக்குறீங்களா?”

அபினாஷ் தன்னுடைய மூத்த மகனிடமிருந்து இப்படியான ஒரு குரலைக் கேட்டு எத்தனை நாட்கள் ஆகின்றன? கருணை நிறைந்த மென்மையான, அன்பான, இரக்கம் சொறியும் குரல். அவர் தலையசைத்தார் – ‘ஆமாம்’. மூத்த பேத்தி உடனடியாக தண்ணீர் கொண்டு வந்தாள். இதுவும் புதிதுதான். அனைவருக்கும் தெரியும்: தாத்தாவைக் கவனித்துக் கொள்வது எப்போதும் பாட்டியின் பொறுப்புதான்.    

இளைய மகன் சொன்னான், “என்ன ஆச்சு, திடீர்னு?” இந்தத் தொனியும்கூட பல ஆண்டுகள் தொலைவிலிருந்து மிதந்து வருவதாகத் தோன்றியது. 

அபினாஷ் தனது உள்ளங்கைகளைத் திறந்து வைத்துச் சொன்னார், “எனக்குத் தெரியலை! திடீரென எப்படியோ, நான் கொஞ்சம்…”

அப்போதுதான் தனது கைகளை இயல்பாக அசைக்க முடிகிறது என்று அவருக்கு உரைத்தது. அவரால் பேச முடிகிறது என்பதும். மறைவாய் அவர் தன்னுடைய பாதத்தை அசைக்க முயற்சி செய்தார்; அதுவும் நகர்ந்தது. அப்படியென்றால், அபினாஷ் சென் என்றழைக்கப்படும் இம்முதிய மாமனிதர் நன்றாகத்தான் இருக்கிறார்.

இளைய மகன் கேட்டான், “இப்போ சரியாயிடுச்சா? இல்லை டாக்டரை கூப்பிடவா?”

மருத்துவரை அழைக்க வேண்டுமா என்பது ஒரு நோயாளியிடம் கேட்கப்பட வேண்டிய கேள்வி அல்ல. அது அபினாஷை ஆழமாகக் காயப்படுத்தியது. மீண்டும் ஒருமுறை அவர் கண்கள் கண்ணீரால் நிறைந்தது, அவர் தலையசைத்தார், “வேண்டாம்.”

“அப்படினா கொஞ்சம் முயற்சி செய்து உங்களை நிதானமாக்கிட்டு தூங்க போங்க. கைகளை உங்க நெஞ்சு மேல வெச்சு தூங்கவேண்டாம், அது சில நேரங்களில் இப்படியான ஏதாவது உண்டு பண்ணும்.”

ஷைலோபாலா படுக்கையின் ஓரத்திலிருந்து எழுந்து கசங்கிய விரிப்பை தன் கைகளால் சரி செய்தபடி சாதாரணமாகச் சொன்னாள், “கோக்கா, நீ உங்கிட்ட இருக்கும் மாத்திரைகள்ல ஒன்னை கொண்டுவந்து கொடேன், அந்த அஜீரண மாத்திரைகள்? இது ஒருவிதமான அஜீரணம்னுதான் நினைக்கிறேன்.”

“இது எதிர்பார்த்ததுதான்,” கோக்கா எந்தத் தயக்கமுமின்றி இயல்பாகச் சொன்னான். “இங்கே உள்ளே நுழையும்போது நானும் அதையேதான் நினைச்சேன் – – தனக்கு வயசாகிட்டே போறதை அவர் பொருட்படுத்தறதே இல்லை, சாப்பிடறது குடிக்கிறது போன்ற விஷயங்கள்ல அவர் தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கனும். குறைந்தபட்சம் இரவிலாவது அவர் மாம்பழங்களைப் போல எதையாவது சாப்பிடாமல் இருக்கறது நல்லது. சில நேரங்கள்ல அவர் சாப்பிடுறதைப் பார்த்தா எனக்கு கவலையா இருக்குது.”

ஒரு பயங்கர நிலநடுக்கம் அபினாஷை உள்ளுக்குள் உலுக்கியது. மிகக் கவனமாக வார்த்துருவாக்கிய, அவரது நம்பிக்கைகள் மற்றும் ஏக்கங்களின் வலியினால் கண்டடையப்பட்ட அவரது சுயமதிப்பு, தற்போது நொருக்கப்பட்டுவிட்டது. அவர் மதிப்பிழந்தவரானார். பின்விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் கண்டதையும் உண்டு நோய்வாய்ப்பட்டுத் துன்புற்று அடுத்தவர்களையும் துன்பத்திலாழ்த்தும் ஒரு வயதானவனாக, மிகச் சில்லறைத்தனமான ஒரு முதியவனாக அவர் மாற்றப்பட்டுவிட்டார்.

ஷைலோபாலா அவருக்கு ஒரு பனியனைக் கொண்டுவந்து சொன்னாள், “அந்த வியர்வையான பனியனை கழட்டுங்க. கோக்கா, புத்து, நீங்க எல்லாம் தூங்கப் போங்க.”

கோக்கா கொட்டாவி விட்டபடி சொன்னான், “என்ன தூக்கம்! இன்றிரவு என்னுடைய தூக்கம் பாழாப்போச்சு.”

புத்து சொன்னான், “ஆமா. நடுராத்திரியில இந்த அமளி – – என்னுடைய வயிறும் கூட ஏதோ குமட்டுவது போலத் தெரியுது. இதற்கு அப்புறமும் என்னால தூங்க முடியும்னு தோனலை.” அவன் இத்தனையும் சொன்ன பிறகும் அங்கிருந்து கிளம்பிச் சென்றான். “இனி எப்படியும் என்னால் தூங்கமுடியாது அதனால் அப்பாவின் பக்கத்துல கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு வர்றேன்” என்று சொல்லவில்லை. 

அவர் தண்ணீர் குடிப்பதைப் பார்த்த பிறகு அவருடைய பேத்திகளும் அங்கிருந்து சென்றுவிட்டார்கள். இப்போது அங்கே இருப்பது ஷைலோபாலா மட்டும்தான் – – அவள் அசைவுகளை வைத்துப் பார்க்கையில் அவளும் அங்கிருந்து செல்லத் தயாராகிக் கொண்டிருக்கிறாள் என்பது தெளிவாகத் தெரிந்தது. 

அபினாஷ் அக்கறையற்ற தொனியில் கேட்டார், “நீயும் போறியா?”

ஷைலோபாலா சற்று திகைப்புற்றாள். “இல்லை, கோக்கா மருந்தைப் பற்றி மறந்துட்டான் போலிருக்கு. நான் போய் எடுத்து வரேன். அப்புறம் கொஞ்ச நேரம் இங்க இருக்கேன்.”

“நீ இங்கே உட்கார வேண்டாம், ஏன் இங்கேயே தூங்கக் கூடாது?”

ஷைலோபாலா, அபினாஷின் இரண்டே முக்கால் அடி அகலக் கட்டிலைப் பார்த்துவிட்டு சொன்னாள். அவளது தொனி சங்கடத்திற்குள்ளானது போல் இருந்தது, “நீங்க பேசுற பேச்செல்லாம்…! உங்க கட்டில் மைதானத்தைப் போல அகலமானதா என்ன?”

ஆச்சரியம்தான், இந்தச் சில நாட்களுக்கு முன்னர்தான் அவரும் ஷைலோபாலாவும் ‘மைதானமளவு அகண்ட’ இதே கட்டிலில், சரி… இதே போன்ற ஒரு கட்டிலில், ஒன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தார்கள். உண்மையில், சில நடைமுறைகள் ஒருமுறை கைவிடப்பட்டுவிட்டால் மீண்டும் தொடங்க முடிவதில்லை, வெட்கம் வந்துவிடுகிறது. பல விஷயங்களில் இப்படித்தான்: உண்பதில் உடுத்துவதில் உறங்குவதில் என…

அபினாஷ் சொன்னார், “ஒருமுறை ரயில் படுக்கையில நாம ரெண்டு பேரும் ஒரே போர்வையைப் போர்த்திக்கிட்டு – -.”

ஷைலோபாலா உடனடியாகச் சொன்னாள், “ச்ச… முதல்ல நிறுத்துங்க, அந்த நாள் இந்த நாள்னு. நம்ம பேத்திங்க நம்மள பார்த்தா சிரிக்க மாட்டாங்களா? நான் போய் கோக்கா இன்னும் என்ன செய்யுறான்னு பார்த்துட்டு வரேன்.” ஷைலோபாலா எழுந்து நின்றாள். 

“எனக்கு எந்த மருந்தும் வேண்டாம்,” என்று சொல்லிவிட்டு அபினாஷ் சுவரைப் பார்த்துத் திரும்பிப் படுத்துக் கொண்டார். 

ஒருவகையில், இந்தப் பழிப்பை ஷைலோபாலா வரமாகவே எடுத்துக்கொண்டாள். ‘மகன்கள் மருந்தை மறந்துட்டாங்க, இப்போ எனக்கும் அவர்களை எழுப்ப தயக்கமாக இருக்கு.’ …ஒரு கணம் கழித்து ஷைலோபாலா காரணமேயன்றி மேஜை மின்விசிறியின் வேகத்தைக் குறைத்து மீண்டும் கூட்டினாள். பிறகு, அமைதியாக அறையை விட்டு வெளியேறினாள்.

ஒருவேளை பேத்திகள் இருவரும் இன்னும் தூங்காமல் விழித்துக்கொண்டிருக்கலாம், இவ்வயதான தம்பதிகள் ஒருவருக்கொருவர் கொஞ்சிக் குலாவுவதாக அவர்கள் நினைத்துக் கொள்ளலாம். இளமையில் முதியவர்கள் முன்னால் அது அசிங்கம்; முதுமையில் இளையவர்களுக்கு முன்னால் அசிங்கம். 

ஷைலோபாலா கிளம்பிச் சென்ற உடனேயே அபினாஷிற்குத் தன் மூச்சு நின்றுவிடும்போலத் தோன்றியது. அவர் எழுந்து அமர்ந்தார், பின், தன் பனியனை மாற்றிக்கொள்ளாமல் மீண்டும் அப்படியே படுத்துக்கொண்டார். படுத்தபடியே அவர் பிரார்த்தனை செய்யத்தொடங்கினார், “கடவுளே, அபினாஷிற்கு முடக்குவாதம் வரச் செய்…”

பக்கவாதம் போன்ற தாக்குதல் இல்லை முழுமையான தாக்குதல். அவர் மனைவியும் மகன்களும் தலையில் அடித்துக்கொண்டு கதறியழும்படியான ஒன்று, ‘நேற்று இரவு நெஞ்செரிச்சல் என்று நகர்ந்துவிட்டோமே… என்ன தவறு செய்துவிட்டோம்!’

குறிப்பாக ஷைலோபாலா. காலையில், “இப்போ எப்படி இருக்கு?” என்று விசாரித்தபடியே தன் கடமையென அவரைப் பார்க்க உள்ளே வரும்போதுதான் எல்லாம் முடிந்துவிட்டது என்பதை உணர்வாள். அவளுடைய வண்ணப் புடவை, கை வளையல்கள், அவள் வாழ்வின் கடன்கள் அத்தனையும் முடிந்து போயிருக்கும் – பிறகு என்ன?

அவர் மீண்டும் ஒரு கருணையற்ற ஆனந்தத்தை அனுபவிக்க முயற்சி செய்தார். மீண்டும் பயனற்றவரானார். கண்களில் நீர் மளமளவெனக் கொட்டத் தொடங்கியது, கண்ணீர் சிற்றோடையென வழிந்து அவர் தலையணையை நனைத்தது.

அபினாஷ் என்றழைப்படும் அம்மனிதன் தன் அறையில் தனிமையில் ஓசையற்று இறந்து கிடக்கிறான் – – நெருங்கிய உறவினனின் மரணத்தைக் காண்பதைப்போல இக்காட்சியைக் கற்பனை செய்து பார்க்கையில் அபினாஷின் நெஞ்சம் வெடித்து விம்மத் தொடங்கியது. செயலற்றுக் கிடக்கும் அந்த உயிரற்ற உருவத்தை நோக்கினார், கண்ணீர்ப் பெருக்கெடுத்து அவரைத் திணறச்செய்தது. ஆனால் நேசமற்ற, சொல்லற்ற, இழிவான அம்மரணத்திற்காக அவர் வேண்டிக் கொண்டிருந்தார்.

No comments:

Post a Comment